வியாழன், 14 செப்டம்பர், 2023

ராகுகேது பெயர்ச்சி பலன்கள் ( 30/10/2023 முதல் 19/05/2025 வரை )

  


 நவகிரகங்களில் அதீத சக்தியும், தனித்தன்மையான வலிமையையும் ஒருங்கே அமையப்பெற்ற சாயா கிரகங்களான ராகுகேது பெயர்ச்சி எதிர்வரும் 30/10/2023 ந்த தேதி அன்று, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் ராசியான மேஷத்தில் இருந்து ராகு பகவான் மீன ராசிக்கும், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஏழாம் ராசியான துலாமில் இருந்து கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர்  இனிவரும் ( 30/10/2023 முதல் 19/05/2025 வரை ) ராகு பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு பனிரெண்டாம் ராசியான மீன ராசியிலும், கேது பகவான் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு ஆறாம் ராசியான கன்னி ராசியிலும் எதிர் கதியில் சஞ்சாரம் செய்து மேஷம் முதல் மீனம் வரையிலான பனிரெண்டு ராசிகளுக்கும் தன்னிறைவாக வாரி வழங்கும் நற்பலன்கள் என்ன? இன்னல்கள் என்ன? என்பதை பற்றியும், பனிரெண்டு ராசிகளுக்கும் நடைபெறும் யோக அவயோக பலாபலன்கள் என்ன ? என்பதை பற்றியும் இனிவரும் பதிவில் மிக தெளிவாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

சாயா கிரகங்கள் என்றால் என்ன ? 

 "ராகுகேது பெயர்ச்சி" பலன்களை சிந்தனைக்கு எடுத்துக்கொள்ளும் முன் சாயா கிரகங்களான ராகுகேது வை பற்றிய ஓர் தெளிவான விளக்கத்தை அன்பர்கள் அனைவரும் அறிந்துகொள்வது அவசியமானது, நவ கிரகங்களில் சாயா கிரகங்களான ராகு கேது ஒருவரது சுய ஜாதகத்தில் தான் அமரும் பாவகத்தை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வல்லமை பெற்றது என்றால் அது மிகையாகாது, தான் அமர்ந்த பாவகத்தில் இணைந்து அமர்ந்த கிரகங்களின் வலிமையையும், தான் அமர்ந்த பாவகத்தை வசீகரிக்கும் கிரகங்களின் வலிமையையும் தனது பலனாக சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு வாரி வழங்கும் சிறப்பு தகுதி பெற்றது இந்த ராகு கேது, நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுதான், நமது ஜனன கால ஜாதகத்தில் ராகு அல்லது கேது தாம் அமர்ந்த பாவகத்திற்கு நன்மையை தருகின்றதா? இன்னல்களை தருகின்றதா? என்பதில் சரியான தெளிவு பெற்று இருப்பதும், கோட்சார ரீதியாக சுய ஜாதகத்தில் ராகு கேது சஞ்சரிக்கும் பாவகம் வலிமை பெறுகிறதா? அல்லது வலிமை அற்று இருக்கின்றதா? என்பதை மட்டும் துல்லியமாக கண்டுணர்வது, நமது எதிர்கால வாழ்க்கையை வெகு சிறப்பாக, யோகமானதாக நிலைநிறுத்திகொள்ள ஏதுவாக அமையும்.

மீனராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் தரும் பொது பலன் : 

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு மீனம் பனிரெண்டாம் ராசி என்பதால், இங்கு சஞ்சரிக்கும் ராகு நீர் தத்துவம் சம்பந்தப்பட்ட உடல் உபாதைகளை வழங்கக்கூடும், உணவு பொருட்கள், தானியம், ஆடை ஆபரணம் போன்ற பொருட்கள் விலை நிலைத்தன்மை அற்று ஏற்ற இறக்கங்களை அதிக அளவில் சந்திக்க கூடும், நிம்மதி அற்ற நிலை, மனநிலை பாதிப்பு, தெய்வீகத்தில் அதீத நாட்டம், மனஇறுக்கம், மனப்பிறழ்வு போன்ற இன்னல்களை பெண்பாலினர் அதிக அளவில் எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும், பொருளாதார சிக்கல்கள் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை தரகூடும், தமது முதலீடுகளில் இருந்து பெரும்பாலான அன்பர்கள் வீண் விரயங்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதால் காப்பீடு செய்து கொள்வது மிகுந்த நன்மைகளை தரும், இழப்புகள் வழியில் இருந்து வரும் பாதிப்பில் ஒவ்வொருவரும் தற்காத்து கொள்வதற்கான சரியான உபாயம் இதுவே, ஏனெனில் ராகுவின் தாக்கம் தாங்க இயலாத இன்னல்களை தரும், பொதுமக்கள் மாயை மற்றும் மனப்போராட்டம் இவற்றில் இருந்து விடுபட குலதெய்வ வழிபாடும், அண்ணதானமும்  சரியான வழிப்பாதையை நல்கும், ஆய கலைகள் 64ம் நல்ல தேர்ச்சியை பெறுவார்கள், கலைகளை தமது ஜீவனாக கொண்டு வாழ்வோருக்கு சகல சம்பத்தும் சேரும், இயல் இசை நாடகம் துறையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் உண்டு, அரசாளும் அன்பர்களுக்கு சோதனை அதிகரிக்கும், தவறான கருத்துக்கள் வெகுவான கலவர பாதிப்புகளை வழங்க கூடும், விளைபொருட்கள் பற்றாக்குறை அல்லது விலைவாசி ஏற்றம் போன்றவற்றால் நிம்மதி இழப்பு உண்டாவதுடன், பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலை தரக்கூடும், விஷ ஜந்துக்கள் தொல்லை, புதிய வகை நோய் தொல்லைகள், உடல் ஆரோக்கிய பாதிப்பு என சற்று அதிக இன்னல்களை எதிகொள்ளும் சூழ்நிலையை தரும் என்பதால், அனைவரும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமானது.

கன்னி ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவான் தரும் பொது பலன் :

 கடின உழைப்பாளிகளுக்கு உழைப்பிற்கான ஊதியம் மற்றும் அங்கீகாரத்தை முழுமையாக பெற இதுவே சரியான காலம், நல்ல தொழில் முன்னேற்றத்தை உழைப்பவர்கள் அனைவரும் சிறப்பாக பெறுவார்கள், புதிய கண்டுபிடிப்புகள் எளிய மக்களுக்கு வெகுவான நன்மைகளை தரும், விவசாயம் செழிக்கும், விவசாயிகள் நலம் பெறுவார், இத்தனை நாள் இல்லாத முன்னேற்றத்தை இனிவரும் காலங்களில் உழவு தொழில் புரிவோர் முழுமையாக அடைவார்கள், நிதி சார்ந்த தொழில்கள் விருத்தி அடையும், ஏற்றுமதி அதிகரிக்கும், பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவர், ஆன்மீக வாழ்க்கை மேலோங்கும், தெய்வீக தரிசனம் பெற அனைவரும் ஆர்வம் காட்டுவர், சிறு குறு தொழில் புரிவோர் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும், பொதுவாழ்க்கையில்  நேர்மை அதிகரிக்கும், பொதுமக்கள் நலம் பெறுவர், பொருளாதார வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும், நாட்டின் முன்னேற்றம் எதிர்பாராத சிறப்புகளை பெரும், அரசு துறை சம்பந்தப்பட்ட அன்பர்களுக்கு மிகுந்த நன்மைகளை பெரும் அற்புதமான நேரமிது, அயல் தேசங்களில் ஜீவனம் செய்யும் அன்பர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு நிச்சயம் உண்டு, உள்நாட்டு தொழில்கள் விவசாயம் போன்றவை செழிக்கும், நினைத்த காரியங்களை அனைவரும் வெற்றி கொள்வர், நீதி நிலைநாட்ட படும், விளையாட்டு துறை மற்றும் மருத்துவ துறை சார்ந்த அன்பர்களுக்கு இனிவரும் காலம் ஒரு பொற்காலமாக  திகழும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை, இளம் பெண்களுக்கு திருமண யோகமும், புத்திர பாக்கியமும் வெகு சிறப்பாக அமையும், தடைகள் அனைத்தும் தகர்த்து எறியப்படும், ஆசிரியர்கள் பெருமை கொள்ளும்  நிகழ்வுகள் உண்டு, மதுவின் பாதிப்பை மக்கள் உணர்ந்து விழிப்புணர்வு கொள்வர், சுய முன்னேற்றத்தில் அதீத ஆர்வத்தை வெளிப்படுத்துவர், மாணவர் அனைவரும் சிறந்த கல்வியை பெறுவார், துன்பங்கள் குறைந்து இன்பங்கள் அதிகரிக்கும் நேரமிது, கேதுவின் சஞ்சாரம் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களையும், புதிய தலைமையினை ஏற்றுக்கொள்ளும் யோகத்தையும் நல்கும், எதிர்பாராத புதிய மாற்றங்களை இந்த நாடு மற்றும் மக்கள் அனைவரும் சுவீகரித்து நலம் பெறுவர்.

குறிப்பு : 

அடுத்த பதிவில் மேஷ ராசி அன்பர்களுக்கு ராகுகேது பெயர்ச்சி வழங்கும் பலாபலன்களை சிந்தனைக்கு எடுத்து கொள்வோம்.

வாழ்க வளமுடன் 

ஜோதிடன் வர்ஷன் 

9443355696