திங்கள், 29 ஜூலை, 2013

சுய ஜாதகத்தில் சுப கிரகங்களின் திசா புத்திகள் நடை பெற்றாலும் ஜாதகர் நன்மையான பலன்களை அனுபவிக்க இயலாத சூழ்நிலை ஏற்ப்பட காரணம் ஏன் ?



சிறந்த கேள்வியாக இதை ஜோதிடதீபம் கருதுகிறது .

ஒருவாருடைய சுய ஜாதகத்தில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படும் , குரு , சுக்கிரன் , புதன், சந்திரன் ஆகியோர்களின் திசை மற்றும் புத்திகள் ஜாதகருக்கு மிகுந்த நன்மையையும், யோக பலன்களையும் வாரி வழங்கும் என்பதாக பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு பரவலான கருத்து உண்டு , இதை அடிப்படையாக கொண்டு ஒருவருக்கு ஜாதக பலன்களை சொல்வது என்பது அந்த ஜாதகருக்கு சரியான வாழ்க்கை பாதையை அமைத்து தர வாய்ப்பு என்பது மிக மிக குறைவே .

 எடுத்து காட்டாக சில அன்பர்களின் ஜாதகத்தில் இயற்க்கை சுப கிரகங்களான குரு, சுக்கிரன், சந்திரன், புதன்  ஆட்சியாகவோ , உச்சமாகவோ அமர்ந்திருக்கும் ஆனால் அதன் திசை மற்றும் புத்திகள் வரும் பொழுது ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்க இயலாமல் தவிப்பார் , மேலும் சிலர் ஜாதகத்தில் இயற்க்கை பாவிகளான சனி,செவ்வாய் ,சூரியன் பகை , நீச்சம் அமர்ந்திருக்கும் ஆனால் அதன் திசை மற்றும் புத்திகள் வரும் பொழுது ஜாதகர் மிகசிறந்த யோக பலன்களை அனுபவிப்பார் , மேற்கண்ட விஷயத்தை பாரம்பரிய ஜோதிட முறையில் ஆய்வுக்கு எடுத்துகொண்டு பலன் காணும்பொழுது இறுதியில் அளவுக்கு அதிகமான குழப்பமே மிச்சும் , ஒரு தெளிவான முடிவுக்கு வருவது என்பது குதிரை கொம்பாகவே இருக்கும் .

ஜோதிடதீபத்தின் கருத்துப்படி எந்த ஒரு கிரகமும் சுப அசுப கிரகமல்ல என்பதை அனைவரும் உணருவது அவசியம் , குறிப்பாக நவகிரகங்கள் ஒருவருடைய சுய ஜாதகத்தில் உடல் ,உயிராகிய லக்கினத்தை அடிப்படையாக கொண்டே , 12 பாவக வழியில் இருந்து சுப அசுப பலன்களை வழங்குகிறது , இங்கே ஒருவருடைய சுய ஜாதகத்தில் 12 பாவகங்களும் எப்படிபட்ட நிலையில் இருக்கின்றன என்பதை தெளிவாக ஜோதிட கணிதம் கொண்டு நிர்ணயம் செய்தால் மட்டுமே குறிப்பிட ஜாதகருடைய யோக அவயோக பலன்களை நிர்ணயம் செய்ய இயலும் .

ஒரு பாவகத்தின் பலனை நிர்ணயம் செய்வதில் நவகிரகங்களின் அமர்வு நிலை , பார்வை நிலை , சேர்க்கை என்ற பல விஷயங்களை எடுத்துக்கொண்ட ஆய்வு செய்தாலும் கூட, ராகு கேது என்ற இரண்டு கிரகங்களுக்கு மட்டும் விதி விளக்கு உண்டு, ராகு கேது எனும் இரண்டு சாய கிரகங்கள் எந்த பாவகத்தில் அமர்கிறதோ அந்த பாவகத்தின் பலனை முழுமையாக ஆளுமை செய்யும் , அந்த பாவகத்தில்  அமர்ந்த , பார்த்த , சேர்ந்த எந்த ஒரு கிரகத்திற்கும் நன்மை தீமை செய்யும் வலிமை கிடையாது , ஆக ஒருவருடைய சுய ஜாதகத்தில் ராகு கேது எனும் இரண்டு கிரகங்கள், தான் அமரும் இரண்டு பாவகங்களின் பலனை நிர்ணயம் செய்துவிடும் , இதற்க்கு மேற்கொண்டே மற்ற பாவகங்களின் பலனை நிர்ணயம் செய்து பலன் காணுவது, ஜாதகருக்கு
சரியான பலனை சொல்ல உதவும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் 12 பாவகங்களின் நிலையை தெளிவாக தெரிந்து கொண்ட பின் , 12 பாவகங்களில் நல்ல வலிமையுடன் இருக்கும் பாவகங்கள் எவை எவை , பாதிப்படைந்துள்ள பாவகங்கள் எவை எவை என்பதை வகை படுத்திகொண்டு , நவ கிரகங்களின் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் ஆகியன எந்த எந்த பாவகத்தின் பலனை தருகிறது என்பதை உணர்ந்து , அதற்க்கு உண்டான பலாபலன்களை தற்பொழுது உள்ள கோட்சார கிரகங்களின் தன்மையையும் தொடர்பு படுத்தி பலன் காணும் பொழுது , ஜாதகருக்கு தெள்ள தெளிவான பலனை மிக சரியாக சொல்ல இயலும், ஜாதகரும் தனது வாழ்க்கையை மிக சிறப்பாக அமைத்து கொள்ள இயலும் .



எடுத்துகாட்டாக :

மேற்கண்ட ஜாதகருக்கு , ஜாதக பலன்களை நிர்ணயம் செய்வோம் ,
ஜாதகரின் லக்கினம்     : மீனம்
ஜாதகரின் ராசி                 : மீனம்
ஜாதகரின் நட்சத்திரம்   : ரேவதி 1ம் பாதம் .

ஜாதக அமைப்பில் நல்ல நிலையில் இருக்கும் பாவகங்கள் :

1,2,8,11 ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
3,5,7,9ம் வீடுகள் பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும்,
10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகத்தில் யோக பலன்களை தரும் ஜாதக அமைப்பில் 10பாவகங்கள் வலிமையுடன் இருப்பது மிகவும் சிறப்பான விஷயம்.

ஜாதக அமைப்பில் பாதிக்கபட்டு இருக்கும் பாவகங்கள் :

6,12ம் வீடுகள் விரைய பாவகமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மட்டும் தீமையான பலன்களை தரும் இவருடைய ஜாதக அமைப்பிற்கு . மேலும் 12ம் பாவகம் சர மகர ராசியாக அமைவதால் தான் தரவேண்டிய கெடுதலான பலன்களை ( அதாவது விரையத்தை ) ஜீவன வழியிலும் , தனது தகப்பனார் வழியிலும் விரைந்து தரும் , இதனால் ஜாதகரின் மன நிம்மதி , பொருள் விரையம் , ஜீவன தடைகள் , தகப்பனார் வழியில் இருந்து வரும் அதிக இன்னல்கள்  என்ற வகையில் ஜாதகரை கடுமையாக பாதிக்கும் , மேற்கண்ட பலன்கள் மிக விரைவாக ஜாதகர் எதிர்பாராத நேரத்தில் நடை பெரும் என்பது கவனிக்க பட வேண்டிய விஷயம் .

மேலும் இந்த தீமையான பலன்கள் ஜாதகருக்கு குரு திசை,புத்தி,
அந்தரம்,சூட்சமம் போன்ற காலங்களிலேயே நடைபெறும் மற்ற கிரகங்களின் திசை, புத்தி, அந்தரம், சூட்சமம் அனைத்தும் 6,12ம் வீடுகள் 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறாத காரணத்தால் இந்த பாதிப்புகள் ஜாதகருக்கு மற்ற திசை புத்திகளில் நடைபெறாது என்பதை கருத்தில் கொள்வது சிறப்பு .

ஜாதக அமைப்பில் மிகவும் சிறப்பாக இருக்கும் பாவகம் :

1,2,8,11 ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பது அதிக நன்மையான பலன்களை வாரி வழங்கும் , இந்த பாவகத்தின் பலன்களை ஜாதகருக்கு அடுத்து வரும் கேது திசை நடைமுறைக்கு கொண்டு வருவாதால் ஜாதகர் இலக்கின வழியில் இருந்தும் , வருமானம் குடும்பம் என்ற அமைப்பில் இருந்தும் , திடீர் அதிர்ஷ்டத்தின் மூலமாகவும் , தனது முற்ப்போக்கு சிந்தனையாலும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திகொள்ளும் தன்மையினாலும் ஜாதகர் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும், மேலும் 11ம் பாவகம் உபய நெருப்பு தத்துவ ராசியான தனுசுவில் தொடங்கி, சர மண் தத்துவ ராசியான மகரத்திலும் வியாபித்து இருப்பதால் , ஜாதகருக்கு கேது திசை மிகுந்த நன்மையான பலன்களையே தரும் , இந்த ஜாதகருக்கு கேது எனும் பாவ கிரகம் யோகமான பலன்களையே தருகிறது.

ஆக ஒருவருடைய ஜாதக பலன்களை நவகிரகங்கள் தான் அமர்ந்த பாவக வலிமையுடனும், தனது திசையில் தான் ஏற்று நடத்தும் பாவகத்தின் தன்மைக்கு ஏற்ப்பவே யோக அவயோக பலன்களை தருகிறது என்பது மேற்கண்ட அமைப்பில் இருந்து  உறுதியாகிறது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
jothidadeepam@gmail.com



  

சனி, 6 ஜூலை, 2013

சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருந்தும், ஜாதகருக்கு திருமணம் நடைபெறாத நிலை ஏன்?



ஒருவருடைய சுய ஜாதகத்தில் பாவகங்கள் சிறப்பான நிலையில் இருக்கும் , ஆனால் ஜாதகர் அதற்குண்டான நன்மையான பலன்களை சிறிதும் அனுபவிக்க இயலாத நிலையில் இருப்பார் , எடுத்துகாட்டாக கிழ்கண்ட ஜாதகத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் .



லக்கினம் : கடகம் 
ராசி : கடகம் 
நட்சத்திரம் : பூசம் 4ம் பாதம் 

சுய ஜாதக அமைப்பின் படி ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகமும் , களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமும் மிகவும் நல்ல நிலையில் இருக்கின்றன.

ஆனால் தற்பொழுது நடக்கும் சுக்கிரன் திசை ( 17/01/2007 முதல் 17/01/2027 வரை ) ஜாதகருக்கு பூர்வ புண்ணியம் எனும் 5ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று 200 சதவிகித தீமையான பலன்களை தந்துகொண்டு இருக்கிறது , ஒருவருடைய ஜாதகத்தில் இளம் வயதில் பாதக ஸ்தானத்தின் பலன் நடை பெரும் பொழுது சம்பந்த பட்ட பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக இன்னல்களை அனுபவிக்க வேண்டி வரும் , குறிப்பாக இந்த ஜாதகருக்கு 11ம் பாவகம் என்பது காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு 2ம் வீடான ரிஷப ராசியாக வருவது ஜாதகருக்கு குடும்பம் என்ற அமைப்பில் இருந்தும், வருமானம் என்ற அமைப்பில் இருந்தும் , வாக்கு என்ற அமைப்பில் இருந்தும்  ஜாதகருக்கு 200 சதவிகித தீமையை தரும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை.

பொதுவாக இவரது ஜாதகத்தை பாரம்பரிய முறையில் ஜோதிட பலன் கண்ட  ஜோதிடர்களின் கருத்து, சுக்கிரன் திசை மிகப்பெரிய முன்னேற்றத்தை வாரி வழங்கும் எனவே சுக்கிரன் திசையில் திருமணம் நடக்கும் , அதுவரை ஜாதகர் திருமணம் செய்யாமல் இருந்து அதற்க்கு பிறகு திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் ஜாதகர் கொடி கட்டி பறப்பார் என்று தெரிவித்துள்ளனர், ஆனால் சுக்கிரன் திசை ஆரம்பித்த உடனே ஜாதகருக்கு செய்து கொண்டிருந்த வேலை பறிபோனது , வருமானம் இல்லாத சூழ்நிலையை தந்தது , இதன் காரணமாக ஜாதகரின் வாழ்க்கை வெகுவாக பாதிக்க ஆரம்பித்தது , கேது திசையில் ஜாதகர் பாதக ஸ்தானத்தின் பலனை அணிபவித்த போதிலும் தனது பூர்வீகத்தில் குடியிருந்து கொண்டு ஓரளவு நன்றாக இருந்தார்.

சுக்கிரன் திசை,சுக்கிரன் புத்தி  ஆரம்பித்தது பூர்வீக ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று இருப்பிடத்தை விட்டே வெளியே துரத்தியது, வருமானத்தில் சிக்கல்களை உருவாக்கியது , பொருளாதார ரீதியான இன்னல்களை வாரி வழங்க ஆரம்பித்தது , ஜாதகரின் பேச்சே ஜாதகருக்கு எதிராக திரும்பியது 19/05/2010 வரை, அதன் பிறகு ஆரம்பித்த சூரியன் புத்தி ஜாதகருக்கு நல்ல வருமானத்தை தந்தது, காரணம் சூரியன் புத்தி 2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை நடத்தியதால் இது சாத்தியம் ஆயிற்று, இந்த காலத்தில் ஜாதகருக்கு மன வாழ்க்கையை அமைத்து தர பெற்றோர்கள் எடுத்த முயற்சிகள் நல்ல முன்னேற்றம் கண்டது , இருப்பினும் ஜாதகர் அதை தவிர்த்தார் எனவே இந்தகாலத்தில் அமையவேண்டிய திருமண வாழ்க்கை தடை பெற ஜாதகரே காரணமாக இருந்தார் .

தற்பொழுது நடக்கும் சந்திரன் புத்தியும் ஜாதகருக்கு களத்திர ஸ்தான பலனை தருவதற்காக , பல வாய்ப்புகளை வாரி வழங்கியது இருப்பினும் ஜாதகர் அனைத்தையும் தவிர்த்தார் , இதற்க்கு காரணம் ஜாதகர் ஒரு பெண்ணை விரும்பியதே, முடிவில் அந்த பெண்ணும் வேறொருவருடன் திருமணம் செய்துகொண்டு இவரை வெகுவாக ஏமாற்றி விட்டார் , இதை ஜோதிட ரீதியாக ஆராயும் பொழுது திசையை மீறி புத்திகள் எவ்வித நன்மையான பலன்களையும்  வழங்க இயலவில்லை என்பது தெளிவாக தெரிகிறது , 200 சதவிகித தீமையை திசை செய்யும் பொழுது , 30 சதவிகித நன்மையை புத்தி செய்தால் ஜாதகருக்கு பெரிய நன்மைகள் எதுவும் நடை பெறுவதில்லை, அப்படியே நன்மை நடந்தாலும் அது ஜாதகருக்கு பெரிதாக தெரிவதில்லை நல்ல மாற்றங்களை வாழ்க்கையில் ஏற்படுத்துவதில்லை .

ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானம் வலிமை பெற்று இருந்த பொழுதிலும் , ஜாதகரின் இளமை பருவத்தில் குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானத்தின் பலனை ஏற்று சுக்கிர திசை பலனை தராததால் (சுக்கிர திசை தந்தது 5ம் வீடு பாதக ஸ்தான பலனை ) ஜாதகருக்கு 2,7ம் பாவக நன்மையை சிறிதும் அனுபவிக்க இயலவில்லை, எனவே ஒருவருடைய சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமை பெற்று இருப்பது மட்டுமே போதாது , சரியான நேரத்தில் சரியான வயதில், நல்ல நிலையில் இருக்கும் பாவகத்தின் பலனை, நடைமுறையில் உள்ள திசை,புத்தி,அந்தரம்,சூட்சமம் ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் குறிப்பிட்ட பாவக வழியில் இருந்து நன்மை மற்றும் யோக வாழ்க்கையை பெற முடியும், மேலும் கேட்சார கிரகங்களின் ஆதரவும்  இருந்தால் மிகப்பெரிய நன்மைகளை ஜாதகர் நிச்சயம் பெற முடியும்  என்பது ஜாதக ரீதியான உண்மை .

இதை தவிர்த்து சுபகிரகங்களின் திசை,புத்திகள் நன்மை செய்யும் என்றும், அசுப கிரகங்களின் திசை புத்திகள் தீமை செய்யும் என்றும் பலன் காணுவது ஜோதிட கணிதத்தை முறையாக அறியாதவர்கள் சொல்லும் ஒரு வாய் ஜாலமே என்றால் அது மிகையாகாது .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696
jothidadeepam@gmail.com



வெள்ளி, 5 ஜூலை, 2013

சந்திராஷ்டமம் என்றால் தீமையான பலன்கள் மட்டுமே நடை பெறுமா ?



பொதுவாக சந்திரன் ராசிக்கு, எட்டம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது , ஜாதகருக்கு மன ரீதியான சிறு பிரச்சனைகளும் , உடல் ரீதியான சிறு பாதிப்புகளையும் , மற்றவர்கள் வழியில் இருந்து அதிக இன்னல்களையும் வழங்கும் என்பாதாக பல ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது , அதிலும் குறிப்பாக தொலைகாட்சியில் ராசி பலன்கள் செல்லும் ஜோதிட மாமணிகளின் கணிப்பு என்பது சந்திராஷ்டமத்தல் பலன் பெரும் ராசி அன்பர்களின் நிலை பற்றி, மிகவும் மோசமாக பலன் சொல்வது என்பது சர்வ சாதரணமாக இருக்கிறது , சந்திராஷ்டமத்தில் குறிப்பிட்ட ராசி அமைப்பை சார்ந்தவர்கள் இனிமேல் சாப்பிட வேண்டாம் என்று சொன்னாலும் சொல்ல கூடும் அன்பர்களே ! இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் காண்போம் .

பொதுவாக ராசி அமைப்பை வைத்து பலன் சொல்வது என்பது ? எங்க ஆத்துக்காரரும் பஞ்சாயத்துக்கு போகிறார் என்பதற்கு ஒப்பானது , ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் காணும் பொழுதே ஜாதகரின் உண்மை நிலையம் , தற்பொழுது ஜாதகருக்கு நடந்துகொண்டு இருந்த , இருக்கின்ற , இருக்க போகிற பலன்களை தெளிவாக, துல்லியமாக எடுத்து சொல்ல இயலும்.

குறிப்பாக ஒருவருடைய ஜாதகத்தில் ராசிக்கு எட்டில் சஞ்சாரம் செய்யும் சந்திரன் ஜாதகருக்கு லக்கினத்தில் இருந்து சிறப்பான பலனை தந்துகொண்டு (திசை, புத்தி, அந்தரம், சூட்சமம்) இருக்கும் பாவகத்துடன் சம்பந்தம் பெரும் பொழுது அந்த பாவகம் கோண வீடாக இருந்து , சந்திரன் கோண அதிபதியாக குறிப்பிட்ட பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் பொழுது மிகுந்த நன்மையையே செய்வார் , இங்கே சந்திரன் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம், லக்கினத்தில் இருந்து பாவக அமைப்பிற்கு நன்மை செய்யும் பொழுது, சந்திராஷ்டமம் மிகுந்த நன்மையே செய்யும் . 

எடுத்துகாட்டாக :

ஒரு மேஷ இலக்கின , கடக ராசி ஜாதகருக்கு, தற்பொழுது நடக்கும் திசை மற்றும் புத்தி 11ம் பாவகத்தின் பலனை செய்கிறது என்று வைத்துகொண்டால், லக்கினத்திற்கு 11ம் பாவகமான  கும்பத்தில் சஞ்சாரம் செய்யும் சந்திரன் ( அவர் தேய்பிறை சந்திரன் என்றாலும் சரி , வளர் பிறை சந்திரன் என்றாலும் சரி ) 100 சதவிகித நன்மையே செய்வார் , இங்கே சந்திரன் கடக ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்கிறார் ( சந்திராஷ்டமம்) என்று ஜாதகர் கவலை கொள்ள தேவையில்லை .

இங்கே ஜாதகருக்கு 11ம் பாவகத்தின் பலனே மிகுந்து நடக்கும் ராசிக்கு சந்திரன் எப்படி இருந்தாலும் அதை பற்றி எவ்வித கவலையும் நாம் கொள்ளத்தேவையில்லை என்பதே எமது கருத்து , இதில் பதினொன்றாம் பாவகமான மகரம் ஸ்திர காற்று தத்துவம் என்பதால் கும்பத்தில்  உலவும் சந்திரன் ஜாதகருக்கு ஸ்திரமான அறிவாற்றலையும் சிறந்த புத்திசாலித்தனத்தையும் விரைந்து தருவார் , அப்பொழுது ஜாதகரின் நடவடிக்கை என்பது மற்றவர்களின் பாராட்டுதலுக்கு உரியதாகவும் , ஜாதகருக்கு லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் தருவதாக இருக்கும் என்பதே உண்மை .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக வைத்து பலன் கானும்போழுதே சரியான பலன்களை சொல்ல இயலும் , பல ஜோதிடர்கள் இன்றைய ராசிபலன் என்ற தலைப்பில் பலன் சொல்கிறார்களே , இவர்கள் மனிதர்களுக்கு ராசி பலன் சொல்கிறார்களா? அல்லது 12 ராசிகளுக்கு பலன் சொல்கிறார்களா ? என்ற சந்தேகம் ஜோதிட தீபத்திற்கு பல நாட்களாக உண்டு. மனிதர்களுக்கு சொன்னால் நிச்சயம் அந்த மனிதனின் சுய ஜாதகம் இல்லாமல் பலன் சொல்ல இயலாது ? ராசிகளுக்கு சொன்னால் இவர்கள் சொல்லும் பலன்களை கேட்டு அதன் படி நடக்கூடிய நிலையில் 12 ராசிகளும் இல்லை என்பதே உண்மை .

ஆக சந்திராஷ்டமம் என்பது தங்களுது சுய ஜாதகத்தை எவ்விதத்திலும் கட்டுபடுத்த வாய்ப்பில்லை என்பதே முற்றிலும் உண்மை , இதை போன்று ராசி பலன் சொல்வதை கேட்டு , அன்றைய கடைமைகளில் இருந்து தவறுவது என்பது உங்களின் வாழ்க்கை முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும் , மேலும் காலம் கண்போன்றது அதை சரியாக பயன்படுத்து அன்பர்களே வாழ்க்கையில்  மற்றவர்களை விட ஒரு படியாவது முன் நிற்கின்றனர் , மற்ற அனைவரும் கால நேரத்தை குறை சொல்லிக்கொண்டு தோல்வியையே தழுவுகின்றனர், இறை நிலை தங்களுக்கு வழங்கி இருக்கும் நல்ல நேரத்தை தவற விடாமல் பயன்படுத்தி  வாழ்க்கையில் 100 சதவிகித வெற்றியை பெறுங்கள் .

உண்மையில் அஷ்டமம் எனும் 8ம் பாவகம் இரண்டு விதமான நன்மை தீமை பலன்களை வழங்கி கொண்டு இருக்கிறது, ஒருவருக்கு இந்த 8ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு வாழ்க்கை துணை வழியில் இருந்தும் , தனது நண்பர்கள் வழியில் இருந்தும் திடீர் தான சேர்க்கையும் , திடீர் அதிர்ஷ்ட வாழ்க்கையையும் தரும் , மேலும் பொதுமக்களை தொடர்பு படுத்தி  செய்யும் அரசியல் , தொழில் , பொது சேவை ஆகியவற்றில் இருந்து 100 சதவிகித வெற்றியை தரும் , ஒருவேளை அந்த ஜாதகருக்கு இந்த 8ம் பாவகம் பாதிக்க பட்டு இருந்தால் மேற்கண்ட அமைப்பில் இருந்து கடுமையான இழப்புகளையும் , துன்பங்களையும் தரும் மேலும் வாழ்க்கை துணை , நண்பர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகும் சூழ்நிலையை தரும், எனவே ஒவ்வொரு பாவகமும் இரண்டு வித பலனை வழங்கும் என்பதே உண்மை , நல்ல நிலையில் இருந்தால் நன்மையையும் பாதிக்கபட்டு இருந்தால் தீமையும் வழங்கும் என்பதனை ஜோதிட கணிதம் கொண்டு ஆராய்ந்தால் , தெளிவாக புரிந்து கொள்ள இயலும் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696