வியாழன், 26 டிசம்பர், 2013

பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் தரும் யோக அவயோக பலன்கள் !



ஒருவருடைய சுய ஜாதக அமைப்பில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஜாதகரின் நல்லறிவு, சிந்தனை திறன், தனக்கு அமையும் வாரிசுகளின் நிலை, கலை துறையில் பெரும் வெற்றி, இயல் இசை நாடக துறையில் ஏற்ப்படும் தனிப்பட்ட திறமை மற்றும் புலமை, தனது குழந்தைகளால் ஏற்ப்படும் யோக வாழ்க்கை, தனது எண்ணத்தின் வலிமை அதனால் கிடைக்கும் வெற்றி என்ற அமைப்பில் இருந்தும்.

 ஆய கலைகள் 64ல் தேர்ச்சி, தர்ம சிந்தனை , இறைசிந்தனை, இறை அருளின் கருணையை பெரும் யோகம், ஜாதகரின் தனிப்பட்ட புத்திசாலித்தனம் என்ற நிலைகளில் தரும் பலன்களை பற்றியும், ஜாதகரின் வாத திறமையினையும், சரியான நேர்மையான தீர்பளிக்கும் தன்மையினையும், தனது சுய அறிவாற்றல் கொண்டு வாழ்க்கையில் தேடும் செல்வ நிலையினை பற்றியும், தனது காதல் வெற்றியினை பற்றியும், தனிப்பட்ட விளையாட்டு திறமைகளை பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவக நிலையினை வைத்து தெளிவாக தெரிந்துகொள்ள இயலும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின் மேற்கண்ட அமைப்பில் இருந்து ஜாதகர் யோக பலன்களை அனுபவிக்கும் தன்மையை தரும், இதற்க்கு மாறாக ஐந்தாம் பாவகம் 4,8,12ம் பாவகத்துடன் தொடர்பு பெற்றாலோ ? ஐந்தாம் பாவகம் பாதக ஸ்தானத்துடன்  (சர லக்கினத்திற்கு 11வீடு , ஸ்திர லக்கினத்திற்கு 9 வீடு , உபய லக்கினத்திற்கு 7வீடு ) சம்பந்தம் பெற்றாலோ? ஜாதகருக்கு மேற்கண்ட அமைப்பில் இருந்து எதிர்பதமாக தீய பலன்களே நடைபெறும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நெருப்பு ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

 ஜாதகர் தனது பூர்விக அமைப்பில் இருப்பதால் வாழ்க்கையில் நிலையான வெற்றியை தரும், குறிப்பாக ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மிக சுறுசுறுப்பாக அமையும், விரைவான செயல்பாடுகளாலும் விரைந்து முடிவெடுக்கும் தன்மையினாலும் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றம் பெரும், ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகளால் ஜாதகரின் வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் செல்வ சேர்க்கை குறுகிய காலத்தில் அபரிவிதமான நிலைக்கு எடுத்து செல்லும், ஜாதகரின் சிந்தனை ஆற்றல் அபரிவிதமாக வேலை செய்யும், மற்றும் அதி புத்திசாலித்தனம் ஜாதகரை வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நெருப்பு ராசியாக அமைந்து பாதிக்க பட்ட  நிலையில் இருந்தால் :

ஜாதகரை தனது பூர்வீகத்தில் இருந்து சிறு வயதிலேயே வெளியே துரத்தி ஜீவிக்க வைத்து விடும், அல்லது  கல்விக்காவோ, ஜீவனம் தேடியோ வெளி ஊருக்கு அனுப்பி விடும், ஒருவேளை ஜாதகர் தனது பூர்விகத்தில் இருப்பின் ஜாதகரின் குணம் மிக மோசமான அமைப்பை பெற்று இருக்கும், தெளிவான செயல்பாடுகள் அற்றவராகவும், முரட்டு பிடிவாதம் கொண்டவராகவும், குரூர எண்ணம் கொண்டவராகவும், தனது சுய லாபத்திற்காக எதை பற்றியும் சிந்திக்காமல் படு பாதக செயல்களை கூச்சம் இன்றி செய்பவராக இருப்பார், மனித நேயம் என்பது ஜாதகரிடம் மருந்துக்கு கூட இருக்காது, மேற்கண்ட அமைப்பே ஜாதகரின் அழிவுக்கு காரணமாக அமைந்துவிடும், மேலும் ஜாதகருக்கு வாரிசு கிடைப்பது அரிதிலும் அரிது.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நில ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் நல்ல உடல் நிலையினையும் தெளிவான சிந்தனை ஆற்றலையும் தரும், ஜாதகருக்கு பூர்வீக சொத்து சுகங்கள் இயற்கையா நல்ல நிலையில் அமையும், ஜாதகரின் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்கள் பாராட்டும் விதத்தில் அமையும், எதையும் பலமுறை யோசனை செய்து சரியாக செய்யும் தன்மையை தரும், ஜாதகரின் பொறுமை வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை வாரி வழங்கும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், அவர்களாலும் சொத்து சுக சேர்க்கை ஏற்ப்படும், மேலும் ஜாதகர் தனது சுய  உழைப்பால் பல தலமுறைக்கு சொத்து சுகங்களை தேடி வைக்கும் தன்மையை தரும் .

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நில ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பிறந்த சில வருடங்களிலேயே தனது பூர்வீகத்தில் தனக்கு அமைந்த சொத்து சுகங்களை இழந்து பரதேச ஜீவனத்தை தந்துவிடும், தனது மூதாதையர்கள் பெயரில் உள்ள சொத்துகள் அனைத்தினையும் இழக்கும் தன்மையை தரும், மேலும் ஜாதகரின் உடல் நிலை கடினமாக பதிக்க படும், இதன் காரணமாக தனது சொத்து சுகங்களை இழக்கும் சூழ்நிலையை கூட தரக்கூடும், மேலும் ஜாதகரின் சிந்தனை ஆற்றலும் பாதிக்க படும், ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன் வர யோசனை செய்வார்கள், இறை அருளின் கருணை ஜாதகருக்கு துணை நிற்க வாய்ப்பு மிக மிக குறைவு, குழந்தை பாக்கியம் அமைவது சற்று பாதிக்கப்பட கூடும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் காற்று  ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் நன்மை உண்டாகும், குறிப்பாக ஜாதகரின் அறிவாற்றலின் வீச்சு மிக பெரிய அளவில் இருக்கும், ஜாதகரின் அறிவார்ந்த செயல்கள் யாவும் பொதுமக்களிடையே பெரிய அளவில் பேசப்படும், ஜாதகரால் இயலாத காரியம் ஒன்றும் இல்லை என்ற நிலையை தரும், தம்மை நாடி வரும் அன்பர்கள் அனைவருக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவிகரமாக இருப்பார், ஜாதகரின் ஆலோசனை படி நடக்கும் அன்பர்கள் யாவரும் குபேர சம்பத்தை பெறுவார்கள், ஜாதகரின் வாக்கு வன்மை மிக சிறப்பாக அமையும், வாக்கு பலிதம் உண்டாகும், ஜாதகரின் முன்னோர்கள் போன்றே ஜாதகரும் சமுதாயத்தில் மக்களுக்கு பிரதி பலன் பாராமல், தொண்டு செய்யும் மனப்பான்மையை தரும், ஜாதகருக்கு நல்ல வாரிசுகள் அமையும், அவர்களின் வாழ்க்கையும் செழுமை பெரும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் காற்று  ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருக்கும் வரை ஜாதகரின் அறிவாற்றல் சிறிதும் வேலை செய்யாது , மற்றவர்களை சார்ந்து ஒட்டுண்ணி போல் வாழும் சூழ்நிலையை தரும், ஒரு சிறு தேவைகளை நிறைவு செய்வதற்கும் மற்றவர்கள் கையை பார்த்து வாழும் சூழ்நிலையை தரும், அப்படி இருந்தாலும் கூட ஜாதகருக்கு உதவி செய்ய யாரும் முன்வர மாட்டார்கள், மேலும் ஜாதகர் சொல்லும் யோசனைகள் யாவும் பெரும் தோல்வியை தரும், நாளடைவில் ஜாதகரின் சிந்தனை மாறும் அறிவு திறன் வெகுவாக மழுங்க ஆரம்பிக்கும், ஜாதகர் செயல்பாடுகள் யாவும் ஜாதகருக்கே எதிராக திரும்பும், தனது அறிவற்ற செயல்களால் அனைத்தையும் இழந்து நடு தெருவுக்கு வரும் சூழ்நிலையை தந்துவிடும்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நீர்  ராசியாக அமைந்து நல்ல நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருப்பதால் வாழ்க்கையில் பல அதிர்ஷ்டங்களை அடைவார், குறிப்பாக கலைத்துறையில் ( இயல், இசை, நாடகம் ) மிகப்பெரிய வெற்றியை பெரும் தன்மையை தரும், குறுகிய காலத்தில் மக்கள் மனதில் இடம்பிடிக்கும் யோகம் கொண்டவர்கள், அனைவரிடமும் இனிமையாக பழகும் தன்மை பெற்றவர்கள், ஜாதகரின் முன்னேற்றம் என்பது அதிர்ஷ்ட வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வெற்றி காணும் தன்மையை பொறுத்து அமையும், எந்த ஒரு விஷயத்திலும் நேர்மறை எண்ணங்களை கொண்டு மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் யோகத்தை தரும், நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த குழந்தைகளை பெறுவார், மனதில் நினைக்கும் எந்த ஒரு காரியத்தையும் சாதிக்கும் தன்மை கொண்டவர்கள்.

ஒருவருடைய சுய ஜாதகத்தில் ஐந்தாம் பாவகம் நீர்  ராசியாக அமைந்து பாதிக்க பட்ட நிலையில் இருந்தால் :

ஜாதகர் பூர்வீகத்தில் குடியிருந்தால் ஜாதகர் அதிக மன உளைச்சலுக்கும், மன அழுத்தத்திற்கும்  ஆளாகும் சூழ்நிலையை தரும், இதனால் ஜாதகரை சார்ந்தவர்களுக்கும் அதிக மன கவலைகளை ஏற்ப்படுத்துவார், குறிப்பாக போதை வஸ்துகளை பயன்படுத்தி தனது ஆரோக்கியத்தை தானே  கெடுத்து கொள்ளும்  நிலையை தரும், ஜாதகரின் முன்னேற்றம் என்பது சிறிதும் இருக்காது, சற்றே கவனிக்காமல் இருந்தால் ஜாதகர் வெகு விரைவில் மன நோய்க்கு ஆளாகும் சூழ்நிலையை தரும், ஜாதகர் செய்யும் செயல்கள் யாவும் மிகப்பெரிய இன்னல்களையே உருவாக்கும், குழந்தை பாக்கியம் கிடைப்பது அரிது, இவர்களை சிறு வயது முதற்கொண்டு சரியாக நேர்வழி பாதையில் நடத்தி செல்வது அவரது பெற்றோரின் கடமை, ஜாதகருக்கு மன நிலை பாதிக்க பட்டால் ஜாதகரை அதில் இருந்து மீட்டு எடுப்பது மிக சிரமமே.

மேற்கண்ட அமைப்பில் ஐந்தாம் பாவகம் நன்மை தீமை பலன்களை தரும், மேலும்  ஐந்தாம் பாவக நிலையை தெளிவாக உணர சர,ஸ்திர,உபய ராசிகளின் அமைப்பை வைத்து நிர்ணயம் செய்வது அவசியம், ஒரு ஜாதகருக்கு நல்ல அறிவு , பூர்வ புண்ணிய சொத்துகள், சிறந்த புத்திசாலித்தனம், சமயோசித புத்திசாலித்தனம், இறை நிலையின் பரிபூரண கருணை, குல தேவதையின் அருள் மற்றும் நல்ல புத்திர சந்தானம் அமைவது ஜாதகரின் பூர்வபுண்ணிய நிலையின் அடிப்படியிலேயே என்றால் அது மிகையாகாது . 

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969
9842421435

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக