வெள்ளி, 26 ஏப்ரல், 2013

நல்ல நேரம் பார்த்து அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுகொள்வது, குழந்தைக்கு யோக வாழ்க்கையை தருமா ?



இதை விட கேலிக்கூத்தான ஒரு விஷயம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம் , முன்பெல்லாம் ஒரு பெண்ணிற்கு சுக பிரசவம் என்பது எளிதாக இருந்தது , இதற்க்கு காரணம் பெண்களின் மன நிலையும்  உடல் நிலையும்  அதற்க்கு ஏற்ற வகையிலே சிறப்பாக அமைந்து இருந்தது , மேலும் மருத்துவர்கள் இயற்கையாக குழந்தை பிறப்பினையே வலியுறுத்தினர் தம்மை நாடி வரும் மக்களுக்கு, தனது நேர்மையின் அடையாளமாக .

 ஆனால் இன்றோ இதற்க்கு மாறாக சில மருத்துவர்கள் இயற்கையாக சுக பிரசவம் பெரும் அமைப்பை பெண்கள் பெற்று இருந்தாலும், அவர்கள் அறுவை சிகிச்சையே பரிந்துரை செய்கின்றனர் , இதற்க்கு காரணமாக பல விஷயங்களை சொல்லலாம் 

1) குழந்தை இயற்கையாக சுகமாக பிறந்தால் மருத்துவமனைக்கும் , தனக்கும் பெரிய வருமானம் இல்லாமல் போய்விடும் என்ற ஒரு காரணத்தினாலும் .

2) குழந்தையின் பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியும் .

3) ஜோதிடர்கள் சொல்லும் நல்ல நேரத்தில் தமது குழந்தை பிறந்தால் உலகத்தையே கட்டி ஆண்டுவிடும் என்ற தவறான எண்ணத்தினாலும்.

4) இந்த நேரத்தில் குழந்தை பிறந்தால் சிலருக்கு ஆகாது என்ற தவறான ஜோதிட ஆலோசனையின் பேரிலும் .

இன்னும் பல சொல்ல இயலாத காரணத்தினாலும் இயற்கையான குழந்தை பிறப்பை மருத்துவர்கள் , அல்லது குழந்தையின் பெற்றோர்கள் தவிர்த்து விடுகின்றனர் என்பதே உண்மை .

சில தொலைகாட்சி ஜோதிட நிகழ்சிகளில் இன்றைக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம் என்ற குறிப்பு வேறு தருகின்றனர் , கலிகாலத்தின் அலங்கோலம்தான் இது என்ற எண்ணமே நமக்கு தோன்றுகிறது . 

இயற்கையின் பேரழிவுகளையும் , பூமியில் மலை பொழியும் தருணங்களையும் , குழந்தை பிறக்கும் நேரத்தினையும் எவராலும் சரியாக கணிக்க இயலாது,  இதை பெரியோர்களே மலைபேரும், பிள்ளைபேரும்  மகாதேவனுக்கே  தெரியாது என்று செலவடையாக சொல்லி வைத்துள்ளார்கள் , ஆக நல்ல நேரம் பார்த்து குழந்தை பிறப்பை நிர்ணயம் செய்வது என்பது முற்றிலும் இயலாத காரணம் , இதற்க்கு சரியான உதரணங்களை கிழே கொடுத்துள்ளோம் , 

எடுத்துகாட்டாக ஜோதிடர் கொடுத்த ஒரு 3 நிமிட நல்ல நேரத்திற்கு உட்பட்ட காலகட்டத்தில் பிறக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் , நொடியிலும் குழந்தையின் பலன்கள் வேறுபடுவதை பாருங்கள் :


ஜாதகம் 1 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:55:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது , 6,12ம் வீடுகள் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,8ம் வீடுகள் குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 2 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:56:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் தீமையான பலன்களை தருகிறது ,8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 6,12ம் வீடுகள் பூர்வ புண்ணிய  பாவகத்துடன் சம்பந்தம் பெற்று நன்மையான பலனை தருகிறது , 2ம் வீடு விரைய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10 ம் வீடுகள் ஜீவன ஷ்தானத்துடன் சம்பந்தம் பெற்றும் , 5,ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .



ஜாதகம் 3 :

இந்த குறிப்பிட்ட தேதியில் (26/04/2013) குறிப்பிட்ட நேரத்தில் (12:57:33) பிறந்த குழந்தையின் ஜாதகத்தில் 1,3,7,9ம் வீடுகள் பாக்கிய  ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மேற்கண்ட பாவக வழியில் நன்மையான  பலன்களை தருகிறது , 6ம் வீடு பூர்வ புண்ணிய பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 8ம் வீடு ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 2ம் வீடு எதிரி பாவகத்துடன் சம்பந்தம் பெற்று தீமையான பலனை தருகிறது , 4,10, 12ம் வீடுகள் விரைய ஸ்தானத்துடன்  சம்பந்தம் பெற்றும் தீமையையும் , 5ம் வீடு குடும்ப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த நன்மையை தருகிறது .11ம் வீடு பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று அதிக தீமையான பலனையும் தருகிறது .




ஆக நிமிடத்திற்கு நிமிடமும் , நொடிக்கு நொடியும் பலன்கள் மாறும் பொழுது நிச்சயம் தங்களின் குழந்தை குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சையின் மூலம் பெற்றுகொள்வது என்பது நிச்சயம் இயலாத காரியம் , மேலும் இடத்திற்கு இடம் அதற்கு உண்டான அமைப்பில் ஜாதக பலன்கள் மாறுபடும் எனவே குறித்த நல்ல நேரத்தில் குழந்தை பிறப்பை எவராலும் நிர்ணயம் செய்ய இயலாது, ஜோதிடர் சொல்லும்  நல்ல நேரத்தில் எவராலும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுகொள்ள இயலாது என்பதே உண்மை .

பொதுமக்கள் இதை உணருவது அவசியம் யாரோ ஒரு ஜோதிடர் சொல்கிறார் என்பதற்காக தங்களின் குழந்தையின் விதி நிச்சயம் மாறிவிட வாய்ப்பு இல்லை , முடிந்த அளவிற்கு தங்களது  குழந்தை இயற்கையாக பிறப்பதற்கு என்ன வழி உள்ளது என்பதை பற்றி  மட்டும் சிந்தியுங்கள் அல்லது மருத்துவ துறைக்கு தன்னை அர்ப்பணித்து  கொண்டு நேர்மையாக மருத்துவம் பார்க்கும் நல்ல மருத்துவரை நாடி இயற்கையாக குழந்தை பிறப்பை பெறுவதற்கு என்ன வழி என்பதை  பற்றி சரியான ஆலோசனை பெறுங்கள்.

ஜோதிட தர்மத்தை முறையாக கடை பிடிக்கும்  எந்த ஒரு ஜோதிடனும் குழந்தை பிறப்பிற்கு  நேரம் குறித்து தருவதில்லை, காரணம் பிறப்பு இறப்பு என்பது ஒருவரின் வினை பதிவின் படி இயற்கையால் நிர்ணயம் செய்யபடுவது என்பதே உண்மை , ஜோதிடன் என்பவன் தங்களின் விதி பாதையில் உள்ள உண்மை நிலைகளை , சாதக பாதக அமைப்புகளை உள்ளது உள்ளபடி சொல்பவரே அன்றி விதியை மற்றும் அளவிற்கு சக்தி படைத்தவர் அல்ல , இறை நிலைக்கு அப்பாற்பட்ட சிறப்பு சக்தி படைத்தவரும் அல்ல , அவரும் தங்களை போன்றே ஒரு சாதாரண மனிதன் என்பதை மறந்துவிட வேண்டாம் அன்பர்களே இதை போன்றே ஜோதிடமும் நமது வாழ்க்கையில் நடைபெறும் நன்மை தீமையை சரியாக எடுத்து சொல்லும் ஒரு கணித அறிவியல் மட்டுமே . 

மருத்துவ தர்மத்தை முறையாக  கடைபிடிக்கும் எந்த ஒரு மருத்துவனும் இயற்கையாக குழந்தை பிறப்பிற்கு  வாய்ப்பு இருக்கும் பொது அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வதில்லை என்பதே முற்றிலும் உண்மை , மேலும் இயற்கையாக பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் , அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும்  குழந்தையின் வளரும் சூழ்நிலையும் அதிக அளவிலே வித்தியாசம் படுகிறது  என்பதை மக்கள் இங்கு கவனிக்க வேண்டும் .

இயற்கையாக பிறக்கும் குழந்தையின் மன ஆற்றல் , உடல் நிலை , அறிவு திறன்  மிகவும் பலம்கொண்டதாக இருக்கிறது என்பது பல ஆராய்ச்சிகள் நமக்கு  உணர்த்துகிறது , இது பற்றி தெளிவு பெற கூகிள் ஆண்டவரை தொடர்பு  கொள்ளுங்கள் அன்பர்களே !

இயற்கையாக குழந்தை பிறப்பு அமையாததிர்க்கு சில முக்கிய காரணங்களாக அறிஞர்கள் சொல்வது :

1) சரியான வயதில் திருமணம் செய்யாமல் தவிர்ப்பது .
2) தேவையான  உடல் உழைப்பு அற்ற நிலை 
3) குழந்தை பிறப்பை தள்ளிபோடுவது .
4) தேவையான அளவிற்கு ஊட்ட சத்து உணவுகளை எடுத்துகொள்ளதது .
5) மனோ ரீதியான பிரச்சனைகள் .
6)​ தன்னம்பிக்கை அற்ற நிலை 
7) கருவுற்று இருக்கும் பொழுது பொற்றோர்களின் ஆதரவு இல்லாத சூழ்நிலை ஆகியவற்றை  குறிப்பிடலாம் .

எனவே அன்பர்களே தங்களின் குழந்தை இயற்கையாக பிறப்பதே குழந்தைக்கும் அதன் தாயிக்கும் மிகுந்த நன்மையை தரும் , தங்களின் குழந்தை  இயற்கையாக பிறப்பதே நல்லது , ஒருவேளை அதற்க்கு வாய்ப்பு இல்லை எனும்பொழுதே அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள் அது மருத்துவரின்  ஆலோசனையாக இருக்கட்டும், ஜோதிடரின் ஆலோசனையாக  இருப்பது சிறந்ததல்ல என்பதே முற்றிலும் உண்மை .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443306969

1 கருத்து: