செவ்வாய், 6 மார்ச், 2018

ராகு கேது தோஷமும், சுய ஜாதகத்தில் பாவக வலிமை தரும் யோக பலாபலன்களும் !



 ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம் போன்ற பாதிப்புகளை, சுய ஜாதகத்தில் ( 1,7 ) ( 2,8 ) ( 5,11 ) வீடுகளில் அமரும் ராகு கேது ஜாதகருக்கு வழங்குவதாகவும், இது ஜாதகருக்கு தாமத திருமணம், இல்லற வாழ்க்கையில் துன்பம், வாழ்க்கை துணைக்கு பாதிப்பு, குழந்தை இன்மை போன்ற பிரச்சனைகளுக்கு மூலகாரணமாக அமையும் என்பதுடன், மேற்கண்ட தோஷங்களை பெற்ற ஜாதகரோ, ஜாதகியோ தனது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் மேற்கண்ட தோஷம் உள்ள ஜாதகியை, ஜாதகரை தனது இல்லற துணையாக ஏற்க வேண்டும், அதுவே பொருத்தமானது, இதற்க்கு மாறாக திருமணம் செய்தால் செய்துகொள்ளும் ஜாதகரோ, ஜாதகியோ தனது வாழ்க்கை துணையை இழந்து தவிக்க வேண்டி வரும் என்பதாக ஓர் கருத்து நிலவுகிறது, இது பரவலாக அனைவரின் மனதிலும் ஓர் இனம்புரியா பயத்தை தந்துகொண்டு இருப்பது ஆலோசணை பெற வரும் அன்பர்களின் கேள்விகளில் இருந்து மிக தெளிவாக தெரியவருகிறது, இதுபோன்ற உண்மைக்கு புறம்பான விஷயங்கள், மூடநம்பிக்கைகள் நமது வாழ்க்கையில் எந்த விதத்திலும் பயன்தர போவதில்லை, மேலும் இதுபோன்ற விஷயங்கள் யாவும் சுய ஜாதக வலிமை பற்றிய ஓர் தெளிவு இல்லாமல் கூறப்படும் கட்டுக்கதைகளே என்பதை எதிர்வரும் சந்ததிகள் நன்கு புரிந்துகொண்டு, சரியான ஜோதிடத்தை நாடி வருவார்கள் என்பது மட்டும் சத்தியம், கீழ்கண்ட ஜாதகருக்கு நிகழ்ந்த நிகழ்வும் மேற்கண்ட மூடநம்பிக்கையின் அடிப்படையில் அமைந்ததே என்றால் அது மிகையாகாது, ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள வலிமை என்ன ? மற்றவர்கள் சொன்ன மூடநம்பிக்கை கருத்துக்கள் என்ன ? என்பதை மிக தெளிவாக இன்றை பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : சிம்மம் 
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சித்திரை 4ம் பாதம்

உண்மைக்கு புறம்பாக ஜாதகருக்கு கூறப்பட்ட மாறுபட்ட கருத்துக்கள் :

1) ஜாதகருக்கு லக்கினத்தில் கேதுவும், களத்திர ஸ்தானத்தில் ராகுவும் அமர்ந்திருப்பது கடுமையான களத்திர தோஷம் .

2) ஜாதகருக்கு ராகுகேது தோஷ ஜாதகம் என்பதால், இதை போன்றே ராகுகேது தோஷம் உள்ள வதுவையே திருமணம் செய்து வைக்க வேண்டும்.

3) ராகுகேது தோஷம் உள்ள ஜாதகர் என்பதால், ராகுகேது தோஷம் அற்ற வதுவை திருமணம் செய்துவைத்தல் , ஜாதகர் மனைவியை இழந்துவிடுவார்.

4) சர்ப்ப தோஷம் உள்ளதால், ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறும்.

5) திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட ராகுகேது தோஷமே காரணம்.

6) ராகுகேது தோஷம் உள்ளதால் புத்திர பாக்கியம் விரைவில் அமையாது.

7) களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு கடுமையான  வியாதியை தரும்.

8)  கேது லக்கினத்தில் அமர்ந்து இருப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது.

9) லக்கினத்தில் கேது ஜாதகரை  சாமியாராக மாற்றிவிடும்.

10 ) கடுமையான ராகுகேது தோஷம் என்பதால் உயிருக்கே பாதிப்பை தரும்.

என்பது போன்ற கருத்துக்களை கூறியிருக்கின்றனர்.

  இனி ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை ஆய்வுக்கு  எடுத்துக்கொள்வோம் அன்பர்களே, லக்கினத்தில் கேது, களத்திர ஸ்தானத்தில் ராகு என்று கூறுவதே  அடிப்படியில் தவறாகும், ஏனெனில் ஜாதகருக்கு லக்கினம் ( சிம்ம ராசியில் 131:59:56 பாகையில் ஆரம்பித்து கன்னி ராசியில் 162:02:38 பாகையில் முடிவு பெறுகின்றது ) எனவே ஜாதகரின் லக்கினம் என்பது சிம்ம ராசியில் 18 பாகைகளையும், கன்னி ராசியில் 12 பாகைகளையும் கொண்டிருக்கின்றது, கேது பகவான் ஜாதகருக்கு சிம்ம ராசியில் ( 126:49:11 பாகையில் ) உள்ள பனிரெண்டாம் பாவகத்தில் அமர்ந்திருப்பதால்  ஜாதகருக்கு லக்கினத்தில் கேது அமர்ந்திருப்பதாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதுடன் , சிம்ம ராசியில் உள்ள 12ம் பாவகத்திலேயே கேது அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, அடுத்து ஜாதகருக்கு களத்திர ஸ்தானம் ( கும்ப ராசியில் 311:59:56 பாகையில் ஆரம்பித்து மீனராசியில் 342:02:38 பாகையில் பாகையில் முடிவு பெறுகின்றது ) எனவே ஜாதகரின் களத்திர ஸ்தானம் என்பது கும்ப ராசியில் 18 பாகைகளையும், மீன ராசியில் 12 பாகைகளையும் கொண்டிருக்கின்றது,  ராகு பகவான் ஜாதகருக்கு கும்ப ராசியில் ( 306:49:11 பாகையில் ) உள்ள ஆறாம் பாவகத்தில் அமர்ந்து இருப்பதால் ஜாதகருக்கு களத்திரத்தில் ராகு அமர்ந்திருப்பதாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதுடன் , கும்ப ராசியில் உள்ள 6ம் பாவகத்திலேயே ராகு அமர்ந்து இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, எனவே ஜாதகருக்கு லக்கினத்தில் கேது அமர்ந்து இருக்கிறார் என்பதும், களத்திர ஸ்தானத்தில் ராகு அமர்ந்து இருக்கிறார் என்பது உண்மைக்கு புறம்பானது, சிம்மத்தில் உள்ள 12ம் பாவகத்தில் கேது பகவானும், கும்பத்தில் உள்ள 6ம் பாவகத்தில் ராகு பகவானும் அமர்ந்து இருக்கின்றனர்  என்பதே முற்றிலும் சரியானது, மேலும் இது கடுமையான களத்திர தோஷத்தை தரவில்லை என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

 ஜாதகருக்கு ராகுகேது தோஷ ஜாதகம் என்பதால், இதை போன்றே ராகுகேது தோஷம் உள்ள வதுவையே திருமணம் செய்து வைக்க வேண்டும், என்பது எந்த ஓர் சாஸ்த்திரத்திலும் கூறப்பட்டதாக தெரியவில்லை, மேற்கண்ட ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக  வழியில் இருந்து ஜாதகருக்கு சாயா கிரகங்கள் மிகுந்த வலிமையுடன் சுபயோகங்களை நல்குவதால், இயற்கையாகவே ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ராகு கேது வலிமை பெற்று இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் ராகு கேது எந்த பாவகத்தில் அமர்ந்து இருந்தாலும், அமர்ந்த  பாவகத்திற்கு வலிமை சேர்க்கும் அமைப்பில் உள்ளதா ? என்பதை மட்டும் தெளிவு படுத்திகொண்டு திருமணம் செய்யலாம்.

 ராகுகேது தோஷம் உள்ள ஜாதகர் என்பதால், ராகுகேது தோஷம் அற்ற வதுவை திருமணம் செய்துவைத்தல் , ஜாதகர் மனைவியை இழந்துவிடுவார் என்பது மூடநம்பிக்கையின் உச்சம் என்றே சொல்லலாம், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பதால் தாம்பத்திய வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும், ஜாதகருக்கு வரும் வாழ்க்கை துணைக்கு யாதொரு துன்பமும் நிகழ வாய்ப்பில்லை என்பதே உண்மை நிலை, இதை போன்ற தவறான மூடநம்பிக்கைகளை கூறுவது என்பது அதனால் வரும் வினைப்பதிவின் தாக்கத்தை ஜோதிடர் அனுபவிக்கும் நிலையை தரும் என்பதே உண்மை என்பதால் சுய ஜாதகத்தில் உள்ள வலிமை நிலையை மட்டும் கருத்தில் கொண்டு  பலன் காண முற்படுவதே சகல நலன்களையும் தரும்.

சர்ப்ப தோஷம் உள்ளதால், ஜாதகருக்கு இரண்டாவது திருமணம் நடைபெறும் என்பதும் உண்மைக்கு புறம்பான விஷயமாகும், மேலும் சுய ஜாதகத்தில் பாவக வலிமையை பற்றி யாதொரு விஷயமும் தெரியாமல் கூறப்படும் கருத்தாகும், ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் 2,7ம் வீடுகள் மிகவும் வலிமையுடன் இருப்பதால் இரண்டாவது திருமணம் நடைபெற வாய்ப்பில்லை என்பதுடன் இல்லற வாழ்க்கையும் சிறப்பாக அமையும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி சந்தோசம் நிறைவாக வானத்து சேரும்.

திருமணம் தாமதம் ஆக மேற்கண்ட ராகுகேது தோஷமே காரணம் என்பதும் தவறானது, ஜாதகருக்கு தற்போழுது நடைபெறும் குரு திசை ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால், ஜாதகருக்கு தொழில் ரீதியான முன்னேற்றங்களை வழங்கி கொண்டு இருக்கின்றது, வலிமை பெற்ற குடும்பம் மற்றும் களத்திர ஸ்தான பலனை ஏற்று  நடத்தும் குரு திசை  சுக்கிரன் புத்தி அல்லது ராகு புத்தியில் திருமண வாய்ப்பு ஜாதகருக்கு கைகூடி வரும், திருமணமும் சிறப்பாக நடைபெறும்.

ராகுகேது தோஷம் உள்ளதால் புத்திர பாக்கியம் விரைவில் அமையாது என்பதும் உண்மைக்கு புறம்பானது, ஜாதகருக்கு 5ம் பாவகம் மிக மிக வலிமையுடன் இருப்பதால் நல்ல புத்திர பாக்கியம் திருமணம் ஆன குறுகிய காலத்தில் கிடைக்க பெறுவார்.

 களத்திர ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு கடுமையான  வியாதியை தரும். இது முற்றிலும் தவறானது, ஜாதகருக்கு களத்திர ஸ்தானத்தில் ராகு அமரவில்லை என்பதுடன், சத்ரு ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு எதிரிகளை  வெற்றிகொள்ளும் தன்மையையும், போட்டி பந்தயங்களில் எதிர்பாராத வெற்றியையும் நல்கும்.

 கேது லக்கினத்தில் அமர்ந்து இருப்பதால் திருமண வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதும் தவறானது, கேது அயன சயன ஸ்தானத்தில் வலிமை பெற்று அமர்ந்து இருப்பது ஜாதகருக்கு, நல்ல உறக்கத்தையும், தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி, செயல்களில் திருப்தியையும் வாரி வழங்கும், ஆன்மீக வாழ்க்கையில் வெற்றியை நல்கும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம், புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை வாரி வழங்கும்.

 லக்கினத்தில் கேது ஜாதகரை  சாமியாராக மாற்றிவிடும். இது மிகுந்த நகைப்புக்கு உரியதாக உள்ளது, 12ல் அமர்ந்த கேது ஜாதகருக்கு நிறைந்த அறிவு திறனையும், தொழில் நுட்பம் சார்ந்த நுண்ணறிவையும், தேடுதலுக்கான பதில்களையும், தன்னிறைவான பொருளாதார வளர்ச்சியையும் வாரி வழங்கும்.

 கடுமையான ராகுகேது தோஷம் என்பதால் உயிருக்கே பாதிப்பை தரும், என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது, சுய ஜாதகத்தில் 6,12ல் வலிமை பெற்ற ராகுகேது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து நல்ல உடல் வலிமையையும், விரைவாக குணம் பெரும் ஆற்றலையும் தரும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகருக்கு மிதம்மிஞ்சிய பொருளாதார  வெற்றிகளையும், படைப்பின் சாராம்சத்தையும் தெளிவு படுத்தும்.

குறிப்பு :

சுய ஜாதகத்தில் அமர்ந்துள்ள ராகு கேது ஜாதகருக்கு தான் அமர்ந்த பாவக வழியில் இருந்து வழங்கும் பலாபலனை மிக துல்லியமாக கருத்தில் கொண்டு ஜாதக பலாபலன் காண்பதே சகல நன்மைகளையும் தரும் என்பதால், சுய ஜாதக பாவக வலிமையை மிக தெளிவாக உணர்ந்து நலம் பெறுக.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. சார் தயவு செய்து தெளிவு படுத்த வேண்டும் .. ராகு திசை பலன தரும...dob-20-09-1979
    Time 1.42 am. Arun

    பதிலளிநீக்கு