வியாழன், 29 நவம்பர், 2018

குரு பெயர்ச்சி பலன்கள் ( லக்கினம் - சிம்மம் )


 சுய வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டிற்கு பெயர்ச்சியாகும் முழு முதற்சுபகிரகமான குரு பகவான் 12 லக்கினங்களுக்கும் தனது சுப திருஷ்ட்டியினாலும், அமர்ந்த இடத்தில் இருந்தும் எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு வழங்கும் பலாபலன்கள் பற்றி விருச்சிகம் முதல் துலாம் வரை, ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே !

 ''எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்பதற்கு இணங்க ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் சுய ஜாதகத்தில் அதிமுக்கிய பங்கு வகிப்பது உடல் உயிராகிய " ஜென்ம லக்கினமாகும் " ஒருவரது வாழ்க்கையில் நிகழும் யோக அவயோகம், நன்மை தீமை போன்றவற்றை ஜென்ம லக்கினமே நிர்ணயம் செய்கிறது, இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை, எனவே நவகிரகங்களின் பெயர்ச்சியை ஜென்ம லக்கினத்தை அடிப்படையாக கொண்டு பலன் காண முற்படுவதே மிக துல்லியமானதாக அமையும், இதுவே அவரவர் சுய தேடுதலுக்கும், முன்னேற்றமிகு யோக வாழ்க்கைக்கும் அடிப்படையாக அமையும் என்பது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

மேலும் இயல்பாக கடந்த இரண்டு வருடங்களாக எதிர் வர்க்க ( கன்னி-புதன், துலாம்-சுக்கிரன் ) கிரகங்களின் வீடுகளில் சஞ்சாரம் செய்த குரு பகவான் தனது இயற்க்கை குணத்திற்கு மாறாக செயல் இழந்த நிலையில் சுபயோகங்களை வாரி வழங்கும் வல்லமை அற்று காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது, தனது வர்க்க கிரகமான செவ்வாய் பகவானின் வீட்டில் ( விருச்சிகம் ) சஞ்சாரம் செய்யும் குருபகவான் தரும் பலாபலன்களை இனி லக்கின வாரியாக சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

லக்கினம் : சிம்மம்

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியாகவும், ஸ்திர நெருப்பு தத்துவ தன்மையை பெற்றதுமான சிம்ம ராசியை ஜென்ம லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, தனது சுய வர்க்க வீட்டில் ( விருச்சிகம் )  பெயர்ச்சியாகும் குரு பகவான் நல்லதொரு மாற்றங்களை தனது சஞ்சார நிலையில் இருந்தும், பார்வை செய்யும் பாவக வழியில் இருந்தும் வாரி வழங்குவது வரவேற்க்கதக்கது, சுக ஸ்தானமான 4ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் சிம்ம லக்கின அன்பர்களுக்கு நல்ல சுகபோக யோக வாழ்க்கையை நல்குவதில் யாதொரு தடையும் தர வாய்ப்பில்லை, புதிய நல்ல வண்டி வாகன யோகம், சொகுசு மிக்க வீடு வசதி வாய்ப்புகள், சொத்து சுக சேர்க்கை, வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம், பொருளாதார உதவிகள், தெய்வீக அனுகிரகம் மூலம் வாழ்க்கையில் ஏற்பாடும் முன்னேற்றம், வாழ்க்கை துணை வழியிலான பொருளாதார ஆதரவு, தாய் வழி சொத்துக்கள் கிடைத்தல், வண்டி வாகன தொழில் மூலம் கிடைக்கும் எதிர்பாராத வருமான வாய்ப்புகள், இறக்குமதி பொருட்கள் வழியிலான ஜீவன மேன்மை, புதிய வாய்ப்புகள் மற்றும் சந்தர்ப்பங்களை முறையாக பயன்படுத்தி முன்னேற்றம் பெரும் வல்லமை, அரசு உதவி, மருத்துவ துறையில் உள்ளோருக்கு கிடைக்கும் அசுர வளர்ச்சி, பொருளாதார நன்மைகள், இன்சூரன்ஜ் மற்றும் கமிஷன் தொழில் செய்யும் அன்பர்களின் வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் நன்மைகள், தெளிவான சிந்தனை கொண்டு பெரும் புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கை என சிம்ம லக்கின அன்பர்களுக்கு சுக ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண நன்மைகளே நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்கத்தக்கது, வாழ்த்துக்கள்.

 குரு பகவான் தனது 5ம் பார்வையால் சிம்ம  லக்கின அன்பர்களுக்கு ஆயுள்  ஸ்தானமான 8ம் பாவகத்தை கோண பலம் பெற்று வசீகரிப்பது, 100% விகித இன்னல்களையே வாரி வழங்கும், மரணத்திற்கு இணையான பேரிழப்பையும், மனம் சார்ந்த அழுத்தம் மற்றும் போராட்டங்களையும் தரும் என்பதுடன், இவை அனைத்தும் வாழ்க்கை துணை, நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் மூலம் வரும் என்பது கவனிக்கத்தக்கது, மீனம் உபய நீர் தத்துவ ராசி என்பதால் சிம்ம லக்கின அன்பர்கள் மனதை செம்மையாக வைத்துக்கொள்வது  நல்லது ஏனெனில், ஒருநிலையில் இல்லாத மனம் தவறான செயல்பாடுகளையும், பின்விளைவு அறியா துன்பங்களையும் வாரி வழங்கிவிடும், பெரியோர்களின் ஆசியின்றி செய்யும் காரியங்கள் யாவும் பேரிழப்பையும், பெரும் துன்பத்தையும் வாரி வழங்கிவிடும், ஆயுளுக்கு பங்கம் தரும் காரியங்களை செய்வதை தவிர்ப்பதே சகல நன்மைகளையும் தரும், குறிப்பாக வண்டி வாகனங்களில் பாதுகாப்பான பயணம் அவசியமாகிறது, தாங்கள் எடுக்கும் திடீர் முடிவுகள் யாவும் மிக மிக தவறானதாக அமைந்துவிட வாய்ப்பு உண்டு, வாழ்க்கை துணையுடனான இணக்கமான சூழ்நிலையை கடைபிடிப்பதே இல்லற வாழ்க்கையில் சகல நலன்களையும் தரும், முடிந்த அளவிற்கு தாங்கள் பணிந்து செல்வதே இல்லற வாழ்க்கையில் இன்பத்தை வாரி வழங்கும், மனதில் தெளிவு பெறுவது மிக மிக அவசியமானதாக " ஜோதிடதீபம் " கருதுகிறது.

குரு பகவான் தனது 7ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு ஜீவன ஸ்தானம் எனும் 10ம் பாவகத்தை வசீகரிப்பது, தொழில் விருத்தியை மிக பெரிய அளவில் வழங்கிய போதிலும், பொருளாதார சிக்கல்களை தரும், வருமானம் சார்ந்த திட்டமிடுதல்கள் சிறப்பாக அமையவில்லை எனில் தங்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவை சந்திக்கும் சூழ்நிலையை தரும், அதே போன்று குடும்ப வாழ்க்கையில் மிகவும் சீரான வார்த்தை பிரயோகம் தங்களின் மனநிம்மதிக்கு குந்தகம் விளைவிக்காது, செலவுகள் எவ்வளவு செய்தாலும் விரையம் செய்வதை தவிர்ப்பது தங்களின் வாழ்க்கையில் இனிவரும் காலங்களில் நன்மையை தரும், மிகுந்த பொறுப்புடன் இல்லற வாழ்க்கையை கையாள்வது மிக மிக அவசியமானதாக அமைகிறது, கொடுக்கல் வாங்கல்களில் தாங்கள் ஒரு நேர்த்தியை இனி கடைப்பிடிப்பதும், கடன் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட முயற்சிப்பதும் தங்களின் வாழ்க்கையில் நிறைவான நன்மைகளை தரும், எதிப்புகளை மிக எளிதாக கையாண்டு வெற்றி பெறுங்கள், புதுவித முயற்சிகளை மேற்கொள்ளும் முன் பலமுறை ஆலோசனை செய்து காரியத்தில் இறங்குவதே சிறப்பான நன்மைகளை தரும், பேச்சில் நிதானம் தேவை என்பதையும் நாவடக்கம் சிம்ம இலக்கின அன்பர்களுக்கு சகல நன்மைகளையும் தரும் என்பதையும் கவனத்தில்கொண்டு செயல்படுங்கள் வாழ்த்துகள்.

குரு பகவான் தனது 9ம் பார்வையால் சிம்ம லக்கின அன்பர்களுக்கு விரைய ஸ்தானம் எனும் 12ம் பாவகத்தை வசீகரிப்பதும், கடகம் சுய வர்க்க கிரகத்தின் ( சந்திரன் ) வீடாக இருப்பதும் ராஜ யோக பலன்களை தரும், முதலீடுகள் வழியிலான நன்மைகள் தேய்பிறை காலங்களில் சிறப்பாக வந்து சேரும், தெய்வீக ஈடுபாடு, தாம்பத்திய வாழ்க்கையில் சந்தோசம், மனரீதியான போராட்டங்களில் இருந்து விடுபடும் தன்மை என மிகுந்த நன்மைகளை தரும், இருப்பினும் புதிய முதலீடுகளை செய்யும் முன் ஆழ்ந்து சிந்தனை செய்து செயல்படுங்கள், தேவையற்ற எதிர்பாலின சேர்க்கை ஏற்ப்பட அதிக வாய்ப்பு உள்ளதால் ஸ்திரமான மன நிலையுடன் தவிர்த்துவிடுவதே தங்களுக்கான முன்னேற்றத்தை சிறப்பாக வாரி வழங்கும், முற்போக்கு சிந்தனையுடன் அனைத்தையும் எதிர்கொள்ளுங்கள், பிற்போக்கு தனமான செயல்பாடுகள், மூடநம்பிக்கைகளில் அதீத ஈடுபாடுகள் கொண்டு இருப்பின் தங்களின் வாழ்க்கையில் தாங்களே இன்னல்களை தேடிகொள்வீர்கள், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு நலம் பெறுவது அவசியமானதாகும், நிறைய எதிர்ப்புகள் வர அதிக வாய்ப்பு உண்டு என்பதால், இனிமையான பேச்சு திறமை கொண்டு எதிர்ப்பை  வெற்றி கொள்ளுங்கள்.

குறிப்பு :

சிம்ம  லக்கின அன்பர்களுக்கு, தற்போழுது நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் சுய ஜாதகத்தில் 4,8,10,12ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட யோக அவயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைமுறையில் உள்ள திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்ஷமம் 4,8,10,12ம்  பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் குரு பெயர்ச்சியினால் யாதொரு நன்மை தீமையும் நடைமுறைக்கு வாராது என்பதை கருத்தில் கொள்க.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக