வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

சுய ஜாதகத்தில் உள்ள யோகங்கள் ( அவயோகங்கள் ) ஜாதகருக்கு பலன் தராமல் போவதற்கு காரணம் என்ன?


சில அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் ராஜ யோகங்கள் ( பாவக வலிமை ) இருந்த போதிலும், ஜாதகர் அதனால் பலன் ஏதும் பெற இயலாமல், வாழ்க்கையில் இன்னல்களை சந்தித்து கொண்டு இருப்பர், சில அன்பர்களுக்கு சுய ஜாதகத்தில் அவயோகங்கள் ( பாவக வலிமை அற்ற நிலை ) இருந்த போதிலு, அதனால் ஜாதகர் எவ்வித இன்னல்களையும் அனுபவிக்காமல் சுக போக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருப்பர், இது எப்படி சாத்தியம் என்ற கேள்வி வருவது இயற்கையே, இதன் உண்மை நிலையை பற்றி இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே ! 

ஒருவரது சுய ஜாதகத்தில் சுபயோகங்கள் இருப்பது மட்டும் சம்பந்த ஜாதகருக்கு, நன்மைகளையும், வெற்றிகளையும் வழங்கி விடாது, சுபயோகங்கள் வழங்கும் பாவக தொடர்பை, ( நடைமுறையில் உள்ள திசாபுத்திகளோ அல்லது எதிர்வரும் திசாபுத்திகளோ ) ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு  சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், இது சுபயோகங்களுக்கு உண்டான சிறப்பு அம்சம்.

 ஒருவரது சுய ஜாதகத்தில் அவயோகங்கள் இருந்து அந்த அவயோகங்களை வழங்கும் பாவக பலனை ( வலிமை அற்ற பாவகம் ) நடைபெறும் திசா புத்திகள் ஏற்று நடத்தவில்லை எனில், சுய ஜாதகத்தில் உள்ள அவயோக பலாபலன்கள் ஜாதகருக்கு நிச்சயம் நடைமுறைக்கு வாராது, மேலும் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான உறவுகளுடன் உள்ள நல்லுறவு பாதிக்கப்படும் அவ்வளவே, எனவே சுய ஜாதகத்தில் உள்ள அவயோக பலாபலன்களை திசாபுத்திகள் ஏற்று நடத்ததே, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு " மிகுந்த நன்மையாக " கருதலாம்.

இதை பற்றி இரண்டு உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம் அன்பர்களே!

சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்தும், அவயோக பலனை அனுபவிக்கும் ஜாதக நிலை :


லக்கினம் : சிம்மம் 
ராசி : கன்னி 
நட்ஷத்திரம் : உத்திரம் 4ம் பாதம் 

இந்த சிம்ம லக்கின ஜாதகருக்கு 1,5ம் வீடுகள் பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது லக்கினம் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து பரிபூர்ண யோகங்களை அனுபவிக்கும் தன்மையை  தரும், 2,8,10,12ம் வீடுகள் வீர்ய ஸ்தானமான 3ம் பாவகத்த்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,8,10,12ம் பாவக வழியில் இருந்து நன்மைகளையும், யோகங்களையும் வாரி வழங்கும், மேலும் 3ம் வீடு லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 4ம் வீடு சுக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும், 11ம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு 3,4,11ம் பாவக வழியில் இருந்து யோகங்களை வாரி வழங்கும் அமைப்பாகும்.

ஜாதகருக்கு 6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும், 7ம் வீடு விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதும் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களையும், 9ம் வீடு பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுவது 200% மடங்கு கடுமையான இன்னல்களை வாரி வழங்கும் என்பது  இவரது ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட நிலை ஆகும்.

இவரது ஜாதகத்தில் சுபயோக பலன்களை 1,2,3,4,5,8,10,11,12 வீடுகள் ஆகிய 9பாவகங்கள் வழங்குகின்றது.

இவரது ஜாதகத்தில் அவயோக பலன்களை 6,7,9 வீடுகள் ஆகிய 3பாவகங்கள் மட்டுமே  வழங்குகின்றது.

இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ஜாதகருக்கு ( 18/01/2013 முதல் 18/01/2031 வரை ) பாதக ஸ்தானமான 9ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இது ஜாதகருக்கு பாதக ஸ்தான வழியில் இருந்து 200%  சதவிகித இன்னல்களையும்  துன்பங்களையும் வாரி வழங்கும் அமைப்பாகும், மேலும் இதனால் ஜாதகர் ராகு திசை முழுவதும், வீண் அவப்பெயர், கல்வியில் தடை, தீய செய்கையின் மூலம் தமது ஆரோக்கியத்தை தாமே கெடுத்து கொள்ளுதல், வீண் அலைச்சல், முன்னேற்ற தடை, ஜீவன மேன்மை இன்றி சிரமம் அனுபவிக்கும் தன்மை என்ற வகையில் இன்னல்களை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

அடுத்து வரும் குரு திசை ஜாதகருக்கு ( 18/01/2031 முதல் 18/01/2047 வரை ) சத்ரு ஸ்தானமான  6ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, இது ஜாதகருக்கு 6ம் பாவக வழியில் இருந்து 100% விகித இன்னல்களை தரும் அமைப்பாகும், இதனால் ஜாதகரின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும், கடன் தொந்தரவுகள், மறைமுக எதிரி தொல்லை அதிகரிக்கும், தொழில் முடக்கம் மற்றும் பணியில் எதிர்ப்பு நிரந்தரம் இல்லாத நிலை என்ற வகையில் இன்னல்களை வாரி வழங்கும், ஜாதகர் கற்றுக்கொண்ட தீய பழக்கங்களினால் ஏற்படும் உடல் தொந்தரவுகளை, குரு திசை காலகட்டத்தில் எதிர்கொள்ளும் நிலையை தரும்.

அதற்க்கு அடுத்து வரும் சனி திசை ஜாதகருக்கு ( 18/01/2047 முதல் 18/01/2066 வரை ) 7ம் வீடு களத்திர ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று  12ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு மிகுந்த மன உளைச்சலையும், மனப்போராட்டத்தையும் வாரி வழங்கும், நிம்மதியற்ற நிலை, வீண் மனபயம் என்ற வகையில் இன்னல்களை தரும், ஏற்படும் விரயத்தை ஜாதகரால் தடுத்து நிறுத்த இயலாது என்பதுடன், அனைவராலும் தொல்லைகளை எதிர்கொள்ளும் சூழ்நிலையை தரும்.

எனவே மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகம் வலிமை பெற்று இருந்த போதிலும், நடைபெறும் திசாபுத்தி, எதிர்வரும் திசாபுத்தி ஜாதகருக்கு வலிமை பெற்ற ( சுபயோகம் ) பாவக பலனை ஏற்று நடத்தாத காரணத்தால், சுய ஜாதகத்தில் யோகங்கள் இருந்த போதிலும் யாதொரு நன்மையையும் ஜாதகருக்கு நடைமுறைக்கு வாராது.

சுய ஜாதகம் வலிமை அற்று இருந்தும், யோக பலனை அனுபவிக்கும் ஜாதக நிலை :


லக்கினம் : துலாம் 
ராசி : ரிஷபம் 
நட்ஷத்திரம் : மிருகசீரிடம் 2ம் பாதம் 

மேற்கண்ட துலாம் லக்கின ஜாதகருக்கு 1,3,5,9,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து 200% விகித இன்னல்களையும், 2,4,8ம் வீடுகள் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து ஸ்த்திரமான இன்னல்களையும், 6,12ம் வீடுகள் முறையே சத்ரு ஸ்தானத்துடனும், விரைய ஸ்தானத்துடனும் சம்பந்தம் பெறுவது மேற்கண்ட பாவக வழியில் இருந்து மிகுந்த துன்பங்களை, இன்னல்களையும் தரும்.

மேலும் 7ம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 7ம் பாவக வழியில் 100% விகித யோகத்தையும்,

10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது 10ம் பாவக வழியில் 100% விகித யோகத்தையும் வாரி வழங்கும்.

 இவரது ஜாதகத்தில் 1,2,3,4,5,6,8,9,11,12 வீடுகள் ஆகிய 10 பாவகங்கள் அவயோக பலன்களை வழங்குகிறது.

இவரது ஜாதகத்தில் 7,10 வீடுகள் ஆகிய 2 பாவகங்கள் மட்டுமே யோக பலன்களை வாரி வழங்குகிறது.

இருப்பினும் தற்போழுது நடைபெறும் ராகு திசை ( 07/09/2009 முதல் 07/09/2027 வரை  ) ஜாதகருக்கு வலிமை பெற்ற 7,10ம் பாவக பலனையே ஏற்று நடத்துகிறது, எனவே ஜாதகருக்கு நல்ல நண்பர்கள், கூட்டாளிகள், பொதுமக்கள் ஆதரவு, பிரபல்ய யோகம், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் நல்ல வாய்ப்புகள், கூட்டு முயற்ச்சியால் பெரும் வெற்றி வாய்ப்புகள், புகழ் மற்றும் அரசு கவுரவம், சமூகத்தில் அனைவரும் மதிக்கும் வண்ணம் அமையும் ஜாதகரின் செயல்பாடுகள், நல்ல ஜீவனம், செய்யும் தொழில் வழியில் இருந்து நல்ல முன்னேற்றம் என்ற வகையில் ராகு திசை முழுவதும் 7,10ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே ஜாதகருக்கு வாரி வழங்கும்.

அடுத்தது வரும் குரு திசையும் ( 07/09/2027 முதல் 07/09/2043 வரை ) ஜாதகருக்கு வலிமை பெற்ற 7ம் பாவக பலனையே ஏற்று நடத்துவது, வரவேற்க தக்க அம்சமாகும், இந்த காலத்தில் ஜாதகர் தமது வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகங்களையும், நண்பர்கள்,கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து அதிக ஆதாயம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக செல்வ சேர்க்கையையும் தங்கு தடையின்றி பெறுவார், மேலும் குரு திசை முழுவதும் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையே ஜாதகருக்கு வாரி வழங்கும்.

மேற்கண்ட இரண்டு ஜாதகங்களில் யோகம் மற்றும் அவயோகங்கள் இருந்த போதிலும் நடைமுறை மற்றும் எதிர்வரும் திசாபுத்திகள் முதல் ஜாதகருக்கு பாதகமாகவும், இரண்டாம் ஜாதகருக்கு சாதகமாகவும் அமைவது, " விதி வலியது "  என்பதை தெளிவாக விளங்க செய்கிறது.

முதல் ஜாதகருக்கு சுபயோகங்கள் இருந்தும் அவை நடைமுறைக்கு வாராதது ஜாதகரின் துர்பாக்கிய நிலையையும், இரண்டாம் ஜாதகருக்கு அவயோகங்கள்  இருந்தும் அவை நடைமுறைக்கு வாராதது ஜாதகரின்  அதிர்ஷ்டத்தையும் கட்டியம் கூறுகிறது.

இதைத்தான் பெரியோர்கள் முதல் ஜாதகருக்கு  "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை" என்றும்.

இரண்டாம் ஜாதகருக்கு " தலைக்கு வந்தது தலை பாதுகையுடன் சென்றது " என்றும்  சிலேடையாக சொல்லியிருக்க கூடும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக