திங்கள், 21 டிசம்பர், 2015

தொழில் வெற்றியும், சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலிமையும் !


 சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது சம்பந்தபட்ட ஜாதகருக்கு தொழில் ரீதியான வெற்றிகளையும், பொருளாதார முன்னேற்றங்களையும் தன்னிறைவாக வாரி வழங்கும், பொதுவாக ஒருவரது சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம், தாம் தொடர்பு பெரும் பாவக வலிமைக்கேற்ப யோகபலன்களை ஜாதகருக்கு வழங்குவதில் எவ்வித குறையும் வைப்பதில்லை, உதாரணமாக சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமை பெறுவது ஜாதகருக்கு சரியான வயதில், அவருக்கு பொருத்தமான தொழில் தொடர்புகளையும், அந்த தொழிலில் நிகரற்ற அனுபவங்களையும் சரியான நேரத்தில் வழங்கிவிடுகிறது.

சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் வலிமையற்று காணப்படும் பொழுதே சம்பந்தபட்ட ஜாதகருக்கு ஜீவனத்தை தாராமல், அதிக அளவில் அவதிகொள்ள வைக்கிறது, மேலும் நடைமுறையில் உள்ள திசை அல்லது எதிர்வரும் திசை ஜாதகருக்கு வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது சிறந்த நன்மைகளை தரும், மாறாக ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்தவில்லை எனில் ஜாதகரின் ஜீவன ஸ்தான வலிமை ஜாதகருக்கு, முழுமையான யோக பலன்களை தருவதில்லை, ஜீவன ஸ்தானம் வலிமை பெற்றும் பலனில்லாமல் போகும் வாய்ப்பு உண்டு.

தொழில் ரீதியான வெற்றிகளை மிக பெரிய அளவில் பெரும் அன்பர்களின் சுய ஜாதகங்களில் ஜீவன ஸ்தானம் மிகவும் வலிமை பெற்றும், தற்பொழுது நடைமுறையில் உள்ள திசை வலிமை பெற்ற ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருக்கும், கேட்சார கிரகங்கள் ஜீவன ஸ்தானத்திற்கு வலிமை சேர்க்கும் பொழுது ஜாதகரின் தொழில் ரீதியான வெற்றிகள் 100% விகிதம் உறுதி செய்யப்படும், ஜாதகர் தாம் மேற்கொள்ளும் தொழில் மூலம் அபரிவிதமான லாபங்களையும், பொருளாதார ரீதியான முன்னேற்றங்களை தங்கு தடையின்றி பெறுகின்றார், இருப்பினும் தொழில் வெற்றிகளை ஜீவன ஸ்தானம் மற்றும் நடைமுறையில் உள்ள திசை ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவதால் மட்டுமே நிர்ணயம் செய்வதில்லை என்பதை கவனிக்கதக்க விஷயமாக "ஜோதிடதீபம்" கருதுகிறது.

 லக்கினம் வலிமை பெறுவது ஜாதகரின் தன் முனைப்பையும், சுய முயற்ச்சி மாற்றும் தொழில் ஆர்வத்தையும், 3ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் எடுக்கும் முயற்ச்சி, வணிக விருத்திகளையும், தொழில் முறை தொடர்புகள் மூலம் வரும் வெற்றிகளை நிர்ணயம் செய்கிறது, 5ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகர் செய்யும் தொழிலில் புதிய யுக்திகளையும், வியாபர தந்திரங்களையும், 7ம் பாவகம் வலிமை பெறுவது பொதுமக்கள் மற்றும் தொழில் முறை கூட்டாளிகள் பரிபூரண ஆதரவையும், 9ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகருக்கு வரும் தொழில் இடர்பாடுகளை மிக எளிதாக கையாளும் தன்மையையும், நிர்வாக திறமையையும், எவ்வித சூழ்நிலையையும் மிக எளிதாக கையாளும் தன்மையும், 11ம் பாவகம் வலிமை பெறுவது ஜாதகரின் முற்போக்கு சிந்தனையையும், தொழில் ரீதியாக பெரும் யோகங்களை பரிபூர்ணமாக அனுபவிக்கும் வல்லமையும், தன்னம்பிக்கை குறையாத மன ஆற்றலையும், பன்முக தொழில் திறன் மூலம் தாம் செய்யும் தொழில் வெற்றிகளை பெரும் யோகத்தை தரும்.

ஓர் உதாரண ஜாதகத்தை ஆய்வு செய்வோம் அன்பர்களே :


லக்கினம் : துலாம் 
ராசி : தனுசு 
நட்சத்திரம் : பூராடம் 3ம் பாதம் 

ஜாதகிக்கு சுய ஜாதகத்தில் 10ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று மிகவும் வலிமையுடன் இருப்பது வரவேற்கதக்க அம்சம், மேலும் ஜாதகியின் ஜீவன ஸ்தானம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு சுக ஸ்தானமான, கடக ராசியில் அமைவது ஜாதகி ஜீவன ரீதியாக பெரும் விரைவான வெற்றிகளை குறிக்கிறது, கடகம் சர இயக்கம் கொண்ட நீர் தத்துவ ராசியாக இருப்பது ஜாதகி பெறும் அதிர்ஷ்டம் மற்றும் யோகங்களின் தன்மையை காட்டுகிறது, மேலும் ஜாதகி மனதில் எண்ணிய எண்ணங்கள் யாவும் நடைமுறைக்கு ஜீவன ஸ்தான வழியில் இருந்து பெறுவார் என்பது உறுதியாகிறது.

தற்பொழுது ஜாதகிக்கு நடைபெறும் ராகு திசை ( 07/12/2012 முதல் 08/12/2030 வரை ) ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்துவது, ஜாதகியின் தொழில் ரீதியான வெற்றிகளை பெறுவதற்கு உண்டான சரியான கால நேரம் இதுவே என்பதும் தெளிவாகிறது, மேலும் தற்பொழுது நடைபெறும் ராகு திசை 8ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தருவது, ஜீவன ரீதியாக திடீர் வெற்றிகளையும், செய்யும் தொழில் வழியில் இருந்து புதையலுக்கு நிகரான சொத்து சுக சேர்க்கையை பெரும் யோகத்தை தருவது கவனிக்க தக்கது ( 8ம் வீடு வலிமை பெறுவது திடீர் அதிர்ஷ்டத்தையும், 8ம் வீடு வலிமை இழப்பது திடீர் இழப்புகளையும் தரும் ) 8ம் வீடு ஸ்திர ராசியிலும், 10ம் வீடு சர ராசியில் அமைவது ஜாதகிக்கு ஸ்திரமான தொழில் வாய்ப்பையும், விரைவான தொழில் முன்னேற்றத்தையும், அதிக லாபத்தையும் வாரி வழங்கும் என்பது கவனிக்க தக்க அம்சம் அன்பர்களே !

ஆனால் ஜாதகிக்கு ராகு திசை துவங்கி 3 வருடங்களுக்கு மேல் கடந்து சென்றாலும், ஜீவன வழியில் இருந்து எவ்வித யோக பலன்களையும் அனுபவிக்கவில்லை, பொருளாதார முன்னேற்றங்களையும் சந்திக்க வில்லை, இதற்க்கு காரணம் ஜாதகி தனது ஜாதகத்தில் உள்ள ஜீவன வலிமையையும், தற்பொழுது நடைபெறும் திசை ஏற்று நடத்தும் பாவக பலனின் தன்மையையும் உணராமல் இருப்பதே, ( ஜோதிடர் ஒருவரின் கூற்றுப்படி ராகு திசை தீமையை தரும் என்ற எண்ணத்தில் தனது சுய ஜாதக வலிமையை உணரவில்லை ) இனி ஜாதகிக்கு ஜீவன ஸ்தானம் வலிமை பெற்று  இருந்தும், நடைபெறும்  ராகு திசை ஜீவன ஸ்தான பலனை ஏற்று நடத்திக்கொண்டு இருந்த போதிலும், ஜீவன ரீதியான வெற்றிகளை பெற இயலாமல் இருப்பதற்கு உண்டான காரணங்களை ஆய்வு செய்வோம் அன்பர்களே !

3,6,9,11,12ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவதால், 3ம் பாவக வழியில் இருந்து ஜாதகி சுய முயற்ச்சி அற்றவர் என்பதும், 6ம் பாவக வழியில் இருந்து எதிர்ப்புகளை கண்டு அஞ்சும் தன்மையும், வீண் மன பயத்தையும், 9ம் பாவக வழியில் இருந்து நிர்வாக திறமையின்மையையும், 11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் யோகம் இல்லாத தன்மையும், பிற்போக்கு எண்ணங்களும், தன்னம்பிக்கை அற்றவர் என்பதையும், 12ம் பாவக வழியில் இருந்து வீண் மன கற்பனைகளையும், அதிக மன போராட்டங்களையும் கொண்டவர் என்பதும், சரியான தீர்கமான முடிவுகளை எடுக்க இயலாத சூழ்நிலையில் உள்ளவர் என்பதையும் தெளிவு படுத்துகிறது.

எனவே ஜாதகி தனது சுய ஜாதக பாவக வலிமையை உணர்வது மிக மிக அவசியம், மேலும் தற்பொழுது நடைபெறும் ராகு திசை தரும் ஜீவன ஸ்தான யோக பலன்களை சுவீகரிக்க தேவையான நடவடிக்கையில், தாமாகவே சுய முனைப்புடன் ஈடுபடுவது மிகுந்த யோகத்தை ஜீவன வழியில் இருந்து வாரி வழங்கும் என்ற உண்மையை உணர்வது அவசியம், இல்லை எனில் ஜாதகத்தில் யோகம் இருந்தும் அதை வீணடிப்பதற்கு ஒப்பான நிலையை ஜாதகிக்கு வரும் எதிர்காலம் தரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக