செவ்வாய், 27 டிசம்பர், 2016

இல்லற வாழ்வை நரகம் ஆக்கும் பொருத்தமில்லா வாழ்க்கை துணை !


" நித்தியகண்டம் பூர்ணஆயுசு " என்ற நிலைக்கு ஆளாக்கும் வல்லமை பெற்றது சுய ஜாதக வலிமை அறியாமல் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது என்பது, பொதுவாக பருவவயதில் வரும் இனக்கவர்ச்சியை மட்டும் அடிப்படையாக கொண்டு இல்லற (காதல் ) வாழ்க்கையில் இணையும் அன்பர்களுக்கு! ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் 90 நாட்களில் இல்லற வாழ்க்கை தனது இறுதி அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தது விடும், கணவன் செய்வது மனைவிக்கு பிடிக்காது, மனைவி செய்வது கணவனுக்கு முற்றிலும் பிடிக்காமல், வாக்குவாதம் அதிகரிக்கும், சமாதானம் செய்ய முற்படுபவரின் கருத்துக்கள் தம்பதியரின் காதுகளுக்கு சென்று அடைவதற்குள், மணவாழ்க்கையில் பிரிவை நோக்கி இருவரும் சென்றுவிடுவார்கள், நலம்விரும்பிகளின் ஆலோசனைகள் யாவும் வீண் விரையம் ஆகும், பெற்றோரின் ஆதரவு உள்ளவர்கள் அடிப்படை ஜீவனத்திற்கு யாதொரு சிரமமும் இன்றி வாழ்வதற்கு வழி உண்டு, பெற்றோர் ஆதரவை இழந்தவர்களின் அஸ்த்திவாரமே ஆட்டம் காணும், தன்னிடம் பல திறமைகள் இருப்பினும் யாவும் ஜாதகருக்கோ ஜாதகிக்கோ உகந்த நேரத்தில் பலன் தாராது, மேலும் பிரிவினால் வந்த மன அழுத்தம், மனஉளைச்சல் ஜாதகரையும், ஜாதகியையும் வெகுவாக பாதிக்கும், உடல் நலம் கெடும், மனநலம் பாதிக்கும், பொருளாதார சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றியான கவலைகள் பூதாகரமாக கிளம்பி நிற்பதை, அந்த தருணத்தில் தான் உணரும் வாய்ப்பை பெறுவார்கள், விதியின் வலிமையை உணர்வார்கள், பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணங்களில் சேர்ந்து வாழும் வாய்ப்பு கொஞ்சம் அதிகம், காதல் திருமணங்களில் அந்த வாய்ப்பு என்பதே இல்லை, திருமண வாழ்க்கையை நடத்தி வைத்த நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் வெறும் பார்வையாளராக மட்டுமே இருப்பார்கள் என்பதை உணருவதற்க்கே இவர்களுக்கு வெகு காலம் ஆகும், இதனால் "ஜோதிடதீபம்" காதலுக்கு எதிரி என்ற எண்ணம் வேண்டாம், சுய ஜாதகம் வலிமை பெற்ற காதலர்களின் வாழ்க்கையே மென்மேலும் பன்மடங்கு யோக வாழ்க்கையை பெற்று இருக்கிறது, சுய ஜாதகம் வலிமை அற்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் கூட விவாகரத்துக்கு சென்று இருக்கின்றது, இது அவரவர் ஜாதக வலிமையை அடிப்படையாக கொண்டது.

கீழ்கண்ட தம்பதியரின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதே, உறவுகளால் இல்லற வாழ்க்கையில் இணைந்தவர்களின் தற்போதைய நிலை பரிதாபத்திற்க்கு உரியது, தசவித பொருத்தம் கண்டும், சுய ஜாதக வலிமை அற்றதால் இல்லற வாழ்க்கையில் குறுகிய காலத்தில் பிரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றனர், இந்த தம்பதியர், இவர்களது சுய ஜாதக வலிமையையும், நடைபெறும் திசாபுத்திகள் தரும் பலாபலன்களை பற்றியும், இந்த பதிவில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

இல்லற வாழ்க்கை இனிமையாக அமைய தம்பதியரின் சுய ஜாதகத்தில் வலிமை பெற்று இருக்க வேண்டிய பாவகங்களை கருத்தில் எடுத்துக்கொள்வோம் அன்பர்களே :

1) குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் பாவகம் வலிமை பெறுவது வரன் வதுவின் சங்கமத்தில் அவசியமாகிறது, இனிமை நிறைந்த வார்த்தைகளும், சிறப்பான குடும்ப வாழ்க்கையையும் நல்கும் வலிமை பெற்றது என்பதனால் தம்பதியரின் ஜாதகங்களில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் வலிமை பெற்று இருப்பது மிக மிக முக்கியமாகிறது. ( பெரும்பாலும் தம்பதியருக்குள் வரும் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணமாக இருப்பதே வாய்தானே )
2) பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் அறிவு திறனையும், தமக்கு ஏற்படும் இன்னல்களை களைவதற்கு உண்டான சமயோசித புத்திசாலித்தனத்தையும், பொறுமையான குணத்தையும் நல்குவது புத்திர ஸ்தானம் எனும் ஐந்தாம் பாவக வலிமையே, மேலும் தனது குலம் செழிக்க திருமணம் ஆனா சில வருடங்களிலேயே நல்ல வாரிசை வழங்குவதும் பூர்வபுண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே, மேலும் தம்பதியரின் ஒருமித்த கருத்து மற்றும் அறிவு திறனை ஒரே நேர்கோட்டில் இணைப்பது மேற்கண்ட 5ம் பாவகமே என்பதனால் பூர்வபுண்ணிய ஸ்தானம் எனும் 5ம் பாவகம் மிக மிக முக்கியமாகிறது.
3) களத்திர ஸ்தானம் எனும் ஏழாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் வாழ்க்கையை நகமும் சதையும் போன்ற உணர்வை தருவது, இருவரின் மனமும் உடலும் ஒன்றற ஜீவசக்தி விரையம் இன்றி கலக்க உதவுவது களத்திர ஸ்தானமே என்றால் அது மிகையில்லை, களத்திர ஸ்தானம் வலிமை பெறுவது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது இணையை பிரியாமல் சேர்ந்து வாழும் யோகத்தை வழங்குவது ( பெரும்பாலான காதலர்களின் வாழ்க்கையை வெற்றிபெற வைப்பதற்கு களத்திர ஸ்தான வலிமையே அடிப்படையாக அமைகிறது ) மேலும் தம்பதியர் இருவரின் வாழ்க்கையில் கவுரவம் மரியாதை, சமூக மதிப்பை பெரிய அளவில் வாரி வழங்குவது களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவக வலிமையே, சுய ஜாதகத்தில் 7ம் பாவகம் வலிமை குன்றி இருப்பின் தனது வாழ்க்கை துணையை தானே தேர்வு செய்வது என்பது கண்ணை கட்டிக்கொண்டு பாலும் கிணற்றில் விழுவதற்கு சமமானது என்பதை அணைத்தது யுவன் மற்றும் யுவதிகளும் கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
4) ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் பாவகம் வலிமை பெறுவது தம்பதியரின் ஆயுளை விருத்தி செய்யும் என்பதுடன், திருமணத்திற்கு பிறகான திடீர் அதிர்ஷ்டங்களை உறுதி செய்யும், கணவன் மனைவி வழியில் இருந்தும், மனைவி கணவன் வழியில் இருந்தும் பெரும் தனசேர்க்கையை பற்றி தெரிவிக்கும் பாவகம் என்பதால், தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட ஆயுள் பாவகம் வலிமை பெறுவது அவசியமாகிறது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுது பரஸ்பரம் கணவன் மனைவிக்கு வரும் திடீர் இழப்புகளையும், விபத்து மற்றும் மருத்துவ செலவுகளையும் தவிர்க்க இயலாது, பெரும்பாலும் ஆயுள் பாவகம் வலிமை இழந்த வாழ்க்கை துணையை பெரும் அன்பர்களின் வாழ்க்கையில் விதி வெகுவாக விளையாடும், ( மனைவியோ கணவனோ ) காலடி எடுத்து வைத்த நேரம் அனைத்தும் இழந்து ஆண்டியாய் போனது அந்த குடும்பம் என்று ஊரார் பரிகாசிக்கும் நிலையை தந்துவிடும்.
5) அதிர்ஷ்டம் மற்றும் லாபம் எனும் பதினொன்றாம் பாவகம் வலிமை பெறுவது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கொண்டுள்ள தன்னம்பிக்கை, ஈடுபாடு, முற்போக்கு சிந்தனை, எதையும் நேர்மறை எண்ணங்கள் கொண்டு சிந்திக்கும் வல்லமை, அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தின் முழு பலனை தம்பதியர் அனுபவிக்கும் யோகம், எதிர்கால வாழ்க்கையை யோகம் நிறைந்ததாக அமைத்துக்கொள்ளும் சரியான திட்டமிடுதல்கள் என தாம்பத்திய வாழ்க்கையின் 100% விகித வெற்றியை நிர்ணயம் செய்வது தம்பதியரின் ஜாதகத்தில் உள்ள லாபஸ்தானம் எனும் 11ம் பாவக வலிமையே, எனவே தம்பதியரின் சுய ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமை பெறுவது மிக மிக அவசியமாகிறது.
6) அயன சயன ஸ்தானம் எனும் பனிரெண்டாம் பாவகம் வலிமை பெறுவது தாம்பத்திய வாழ்க்கையில் உடல் ரீதியாக வழங்கும் சந்தோஷங்களையும், மனநிறைவையும், நிம்மதியான யோக வாழ்க்கையையும் நிர்ணயம் செய்கிறது, தம்பதியரின் சுய ஜாதகத்தில் மேற்கண்ட அயன சயன ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் அந்நியோன்னிய இல்லற இன்பங்களை வாரி வழங்கும், உடல் மனம் ரீதியான உணர்வுகளை பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் மதித்து நடந்துகொள்ளும் யோகத்தை தரும், தாம்பத்திய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் வல்லமையை தம்பதியர் இருவருக்கும் தரும், நல்ல ஆன்மீக வெற்றியையும், இறை அருளின் பரிபூர்ண ஆசிகளையும் வழங்கும் வல்லமை கொண்டது, மேற்கண்ட பாவகம் வலிமை இழக்கும் பொழுதே தாம்பத்திய அந்நியோன்னிய வாழ்க்கையில் மனக்கசப்பை தருகிறது, இல்லற வாழ்க்கையில் பேரிழப்புகளையும், தவறான உறவுகள் வழியில் இன்னல்களை தேடிக்கொள்ளும் சூழ்நிலைக்கு ஆர்ப்படுகிறார்கள், இதனால் இல்லற வாழ்க்கை 200% விகித இன்னல்களை சந்திக்கிறது என்பது கவனிக்க தக்க விஷயமாகிறது.


ஜாதகி


லக்கினம் : மீனம்
ராசி : துலாம்
நட்ஷத்திரம் : சுவாதி 3ம் பாதம்

ஜாதகிக்கு அடிப்படையில் லக்கினம் திடீர் இழப்பை தரும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த இன்னலுக்கு ஆளாக்கும், லக்கினம் வலிமை இழப்பது ஜாதகிக்கு உகந்தது அல்ல, மேலும் ஜாதகி தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து இழப்புகளை பெரிய அளவில் சந்திக்கும் சூழ்நிலையை தரும், குடும்ப ஸ்தானமும் ஆயுள் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகியின் குடும்ப வாழ்க்கையை வெகுவாக பதம் பார்க்கும், ஜாதகியின் வார்த்தைகள் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இன்மையை தரும், பொருளாதார சிக்கல்களை கடுமையாக, ஜாதகிக்கு ஜாதகியின் கணவருக்கும் தரும், 5ம் பாவக வலிமை பெறுவது ஜாதகிக்கு சிறப்பான விஷயம் என்றாலும், இது நடைமுறைக்கு வர ஜாதகிக்கு நல்லதொரு குழந்தை ( ஆண் ) பாக்கியம் அமைவது அவசியமாகிறது, களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது எண்ணிலடங்கா துன்பங்களை வாழ்க்கை துணை வழியில் இருந்தும், எதிர்ப்பால் இன அமைப்பினரிடமும் ஜாதகி சந்திக்கும் துர்பாக்கிய நிலையை தரும், நண்பர்கள்,உறவுகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் உயிர் பயத்தை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது தன் கணவனுக்கு திடீர் யோகங்களை தரும், ஜாதகிக்கு பூர்ண ஆயுள் அமைப்பை தரும், இருப்பினும் தனது கணவரால் ஜாதகிக்கு யாதொரு நன்மையையும் இல்லை என்பது கவனிக்க தக்கது, லாப ஸ்தானம் வலிமை இழப்பது ஜாதகிக்கு அதிர்ஷ்டம் அற்ற வாழ்க்கையையும், தன்னம்பிக்கை இன்மையையும், பிற்போக்குத்தனமான செய்கையினால் தனது வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையை தரும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது, தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தியற்ற நிலையையும், மன கட்டுப்பாடு இன்றி சிந்திக்கும் தன்மையையும், வீண் விரையங்களையும், அனைவராலும் கடுமையான தொல்லைகளை சந்திக்கும் சூழ்நிலையையும் தரும், இல்லற வாழ்க்கையில் தேவையில்லாத சகவாசத்தை தந்து, விரைவாக குடும்ப வாழ்க்கைக்கு மூடு விழா நடத்தும், ஆனால் தற்போழுது நடைபெறும் சனி திசையும், புதன் புத்தியும் ஜாதகிக்கு 5,10ம் பாவக வழியில் இருந்து யோகத்தை தருவது வரவேற்க தக்க அம்சமாகும்.

ஜாதகர்


லக்கினம் : மிதுனம்
ராசி : மேஷம்
நட்ஷத்திரம் : அஷ்வினி 1ம் பாதம்

ஜாதகருக்கு லக்கினம் மற்றும் குடும்ப ஸ்தானம் வலிமை பெற்று இருப்பது வரவேற்கத்தக்க அம்சமாகும், மேலும் 5ம் பாவகம் வலிமை பெறுவது சிறப்பான விஷயம் 100% விகித யோகத்தை பூர்வ புண்ணிய ஸ்தான வழியில் இருந்து தரும், களத்திர ஸ்தானம் வலிமை இழப்பது வாழ்க்கை துணையுடனான நெருக்கத்தை குறைக்கும், வாழ்க்கை துணை வழியில் திடீர் இழப்பை தரும், ஆயுள் பாவகம் வலிமை பெறுவது, ஜாதகருக்கு நீண்ட ஆயுளையும், வாழ்க்கை துணையை நிந்தனை செய்யும் தன்மையை தரும், லாப ஸ்தானம் வலிமை இழப்பது எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவி செல்லும், தன்னம்பிக்கை குறையும், பிற்போக்கு தனமான வாதம் ஜாதகரின் வாழ்க்கையை கடுமையாக பாதிக்கும், அயன சயன ஸ்தானம் வலிமை இழப்பது தாம்பத்திய வாழ்க்கையில் மனக்கசப்பை ஏற்படுத்தும், மன நிம்மதி குறையும், எதிர்பால் உறவுகள் மூலம் ஜாதகரின் வாழ்க்கை அதிக அளவிலான இன்னல்களையும், சிக்கல்களையும் வழங்கும், தம்பதியருக்குள் மகிழ்ச்சி இன்மையும், கவர்ச்சி இன்மையும் அதிகரித்து பிரிவில் கொண்டுவந்து நிறுத்தும், ஜாதகருக்கு சில பாவகங்கள் வலிமை பெற்ற போதிலும், ஜாதகரின் சகவாச தோஷம் ஜாதகரை படுகுழியில் தள்ளும்.

மேற்கண்ட தம்பதியரின் வாழ்க்கையில் சுய ஜாதக வலிமை இன்மையே பிரிவை நோக்கி அழைத்து சென்றுகொண்டு இருக்கின்றது, இதற்க்கு தம்பதியரின் சுய ஜாதக வலிமை இன்மையே மிக முக்கிய காரணமாக அமைகிறது, தற்போழுது நடைபெறும் சூரியன் திசை சனி புத்தி வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினாலும், அடுத்து வரும் புதன் புத்தி தம்பதியரின் இல்லற வாழ்க்கைக்கு சிறப்பான நன்மைகளை வழங்க வாய்ப்பு இல்லை என்பதே முற்றிலும் உண்மை.

குறிப்பு :

திருமணத்திற்கு முன்பு சுய ஜாதக பாவக வலிமையை அறிந்து, இல்லற வாழ்க்கையை ஏற்று கொள்வதே புத்திசாலித்தனம், இதில் தவறு இழைத்தால் வாழ்நாள் முழுவதும் மிகப்பெரிய தவறு செய்தத்திற்கு உண்டான இன்னல்களை தம்பதியர் சந்திக்க வேண்டி வரும், தம்பதியரின் ஒருவரது ஜாதகமாவது பாவக ரீதியாக வலிமை பெற்று இருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக