சனி, 14 ஜூலை, 2018

ஜாதகஆலோசணை : அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா?


கேள்வி :

வணக்கம் எனக்கு இரு மகன்கள் உள்ளனர் ( இரட்டை குழந்தைகள் ) , இதில் இளையவர் சிறப்பு மிகுந்த இந்திய ஆட்சி பணியில் தேர்ச்சி பெற்று அரசு பணியில் உள்ளார், மூத்தவருக்கு இதுவரை யாதொரு வேலையும் அமையவில்லை, இருவருக்கும் பிறந்த நேரம் வெறும் 5நிமிடம் மட்டுமே வித்தியாசம், இருவரது ஜாதகமும் ஒன்றை போலவே உள்ளது, ஒரே லக்கினம், ஒரே நட்ஷத்திரம், ஒரே ராசி, நடைபெறும் திசாபுத்திகளும் ஏறக்குறைய ஒரே அமைப்பில் உள்ளது இருப்பினும் இருவருக்கும் முரண்பட்ட பலாபலன்கள் நடைபெற காரணம் என்ன ? மூத்தவருக்கு அரசு வேலை அமையுமா ? தனியார் துறையில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளதா? சற்று தெளிவுபடுத்த வேண்டுகின்றேன் .

பதில் :

இரட்டை குழந்தைகள் ஜாதகத்தில் பிறந்த நேரம் என்பது சில நிமிடங்கள் வித்தியாசம் இருப்பினும், ஜாதகத்தில் லக்கினம்,ராசி,நட்ஷத்திரம் மற்றும் திசாபுத்திகள் ஒரேமாதிரியாக இருப்பது வியப்பில்லை, ஆனால் சுய ஜாதக வலிமை என்பது ( லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகள் தொடர்பு பெரும் பாவக நிலை ) வெகுவான வித்தியாசங்களை கொண்டு இருக்கும், சில நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர் ஜாதகம் மேலோட்டமாக பார்க்கும் பொழுது ஒன்றைப்போலவே ஒன்று இருப்பினும், பாவக வலிமை என்பது ஒன்றைப்போல் ஒன்று இருக்காது என்பதை கருத்தில் கொள்வது நல்லது, தங்களது மகன்கள் இருவரும் இரட்டை பிறவிகள் என்பதாலும், 5 நிமிட வித்தயாசத்தில் பிறந்து இருப்பதாலும் இருவருக்கும் ஒரே மாதிரியான பலாபலன்கள் நடைமுறைக்கு வரும் என்று கருதுவது முற்றிலும் தவறான அணுகுமுறை அன்பரே ! இதை பற்றி இன்றைய சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

அண்ணன் ஜாதகம் :


லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 1ம் பாதம்

ஜாதகருக்கு பாவக தொடர்புகள் :

1,5,7,11ம் வீடுகள் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,5,7,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பு வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.

4ம் வீடு சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், வீடு நிலம், இடம், வண்டி வாகனம் போன்ற அமைப்பில் இருந்து சுகபோகங்களை வாரி வழங்கும் என்பதால் ஜாதகத்தில் மேற்கண்ட பாவக தொடர்பையும் வலிமை மிக்கதாக எடுத்துக்கொள்ளலாம்.

2,6,10,12ம் வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2,6,10,12ம் பாவக வழியில் இருந்து கடுமையான இன்னல்களை தரும் மேலும் ஜாதகரின் 12ம் பாவகம் கடக ராசியில் 9 பாகைகளையும், அரசு துறையை குறிக்கும் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தில் 21 பாகைகளையும் கொண்டு வலுவிழந்து நிற்பது ஜாதகருக்கான அரசுத்துறை பணி என்ற விஷயத்தை "கானல்நீராக" மாற்றிவிடும் என்பதால் ஜாதகருக்கு மேற்கண்ட பாவக தொடர்புகள் ஜாதகத்தில் வலிமை அற்று இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.

3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் படுதோல்வியையும், வீரியமிக்க செயல்திறன் அற்றவர் என்பதையும் தெளிவுபடுத்துகிறது, 9ம் பாவக வழியில் இருந்து உயர் கல்வி மற்றும் ஆய்வு படிப்பு போன்றவற்றில் தேர்ச்சி  பெற வலிமையற்றவர் என்பதை உறுதி செய்கிறது, ஜாதகர் வீண் கற்பனையில் உலகில் சஞ்சரிக்கும் தன்மை பெற்றவர் என்பதையும் அறுதியிட்டு சொல்கிறது, மேலும் சுய ஜாதகத்தில் 3,9ம் வீடுகள் பாதக ஸ்தானமான 9ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 200% விகித இன்னல்களை தரும் என்பதை கருத்தில் கொள்வது நல்லது, எனவே ஜாதகர்  இந்தியாவின் உயரிய படிப்பான இந்திய ஆட்ச்சிப்பணிக்கு படிப்பது என்பது " எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போகிறார் " என்பதற்கான நிலையை தந்துவிடும் என்பதே சுய ஜாதகத்தில் உள்ள உண்மை நிலை.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தந்த போதிலும், திடீர் இழப்புகளையும், ஏமாற்றங்களையும் தவிர்க்க இயலாது, தொடர் தோல்விகளை தரக்கூடும், நிம்மதியின்மை என்பது ஜாதகரின் வாழ்க்கையை வெகுவாக பாதிக்கும்.

மேற்கண்ட ஜாதகத்தில் 1,4,5,7,11ம் வீடுகளை தவிர மற்ற 7வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக 3,9ம் வீடுகள் பாதக ஸ்தான தொடர்பை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த இன்னல்களை சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து வாரி வழங்கும்.

நடைபெறும் குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து நன்மையை தந்த போதிலும், தேர்வுக்கான முயற்சி செய்த நேரத்தில் ஜாதகருக்கு பாதக ஸ்தான பலனை நடைமுறைக்கு கொண்டு வந்தது யாதொரு நன்மையையும் பெற இயலாத நிலையை தந்து விட்டது, மேற்கண்ட ஜாதகருக்கு சுய ஜாதகத்தில் பாவக வழியிலான வலிமை இன்மை சரியான ஜீவனத்தை வழங்கவில்லை என்பதே உண்மை நிலை.

தம்பி ஜாதகம் :


லக்கினம் : சிம்மம்
ராசி : மகரம்
நட்ஷத்திரம் : அவிட்டம் 2 ம் பாதம்

1,3,5,7,9,11ம் வீடுகள் அனைத்தும் லாப ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 1,3,5,7,9,11ம் பாவக வழியில் இருந்து அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும், குறிப்பாக 1ம் பாவக வழியில் இருந்து வளரும் சூழ்நிலையில் சிறப்பு, சுய கட்டுப்பாடு, நல்ல உடல் மன ஆரோக்கியம் என்ற வகையிலும், 3ம் பாவக வழியில் இருந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, லட்சியங்களை அடைதல், சிறந்த தகவல் தொழில்நுட்ப அறிவு, வீரியமிக்க செயல்பாடுகள், வெற்றியை பெறுதல், தன்னம்பிக்கை என்ற வகையிலும், 5ம் பாவக வழியில் இருந்து சமயோசித அறிவு திறன், அதிபுத்திசாலித்தனம், வாய்ப்புக்களை பரிபூர்ணமாக பெற்று நலம் பெறுதல், இறை அருள் கருணையினால் அனைத்தும் எளிதாக கிடைத்தல், கற்ற கல்வி வழியிலான அபரிவித முன்னேற்றம் என்ற வகையிலும், 7ம் பாவக வழியில் இருந்து நல்ல நண்பர்கள், சிறந்த கூட்டாளிகள், அவர்கள் வழியிலான ஆதரவு, பொதுமக்கள் ஆதரவு, செல்லும் இடங்களில் கிடைக்கும் மதிப்பு மரியாதை, பரிபூர்ண நன்மைகளை சுவீகரிக்கும் வல்லமை என்ற வகையிலும், 9ம் பாவக வழியில் இருந்து மிகசிறந்த அறிவு திறன், உயர்கல்வி, ஆய்வுக்கல்வி, நிர்வாக படிப்பு போன்றவற்றில் அதீத தேர்ச்சி, கற்ற கல்வி வழியிலான நன்மைகளை ஜாதகர் சுவீகரிக்கும் வல்லமை, அரசு துறை ஆதரவு என்ற வகையிலும், 11ம் பாவக வழியில் இருந்து நீடித்த அதிர்ஷ்டம், முற்போக்கு சிந்தனை, மிக எளிதாக அனைத்தும் கிடைத்தல், தெய்வீக அனுக்கிரகம், அறிவார்ந்த முயற்சிகள் வழியிலான ராஜயோக பலன்கள் என்ற வகையிலும் சிறப்பான நன்மைகளை தரும் என்பது கவனிக்கத்தக்கது.

2ம் வீடு குடும்ப ஸ்தானமான 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகர் சிறந்த வாக்கு வன்மையும், பேச்சு திறனும் கொண்டவர் என்பதை தெளிவு படுத்துகிறது, தனம் சார்ந்த விஷயங்களில் தன்னிறைவு கொண்டவர் என்பதுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை கடைபிடிக்கும் வல்லமை பெற்றவர் என்பதுடன், நிறைவான பொருளாதர முன்னேற்றம் மற்றும் இனிமையான குடும்ப வாழ்க்கையை பெற்று மகிழ்ச்சியுடன் இல்வாழ்க்கையை நடத்த தகுதி கொண்டவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

4,8,10,12ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 4ம் பாவக வழியில் இருந்து சொத்து சுக சேர்க்கை, வண்டி வாகன யோகம், நல்ல குணம், சுய உழைப்பில் வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுபவர் என்பதையும், 8ம் பாவக வழியில் இருந்து திடீர் அதிர்ஷ்டம்,  அந்தஸ்த்து கவுரவம் போன்றவற்றை விரைவாக பெறுதல், சகல வசதிமிக்க உத்தியோகம், பதவியில் திடீர் உயர்வு என்ற வகையிலும், 10ம் பாவக வழியில் இருந்து சிறந்த உத்தியோகம், வியாபார முன்னேற்றம், செய்யும் தொழில் வேலை முதலியவற்றில் அபரிவித வளர்ச்சி, வெற்றிகரமான யோக வாழ்க்கை, கம்பீரமான பேச்சு, தீர்க்கமான வாத திறன் என்ற வகையிலும், 12ம் பாவக வழியில் இருந்து எதிரிகளின் சூழ்ச்சியே ஜாதகருக்கு சாதகமாக மாறும், அரசு பதவியில் திடீர் உயர்வு, தொழில் மற்றும் பணியில் திடீர் அதிர்ஷ்டம், ரகசிய ஏஜென்ட் என்ற வகையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும்.

6ம் வீடு சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது பங்கு கொள்ளும் அனைத்து தேர்விலும் தேர்ச்சியை தரும், வழக்குகளில் வெற்றி என்றவகையில் நன்மையை தந்த போதிலும், உடல் நலம் சார்ந்த பாதிப்புகள் சில நேரங்களில் தொந்ததரவை தரக்கூடும் என்பது மட்டும் சற்று கவனிக்க வேண்டிய விஷயமாகும்.

இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் பனிரெண்டு வீடுகளும் தாம் தொடர்பு பெரும் பாவக வழியில் இருந்து சகல யோகங்களையும் தருவது கவனிக்கத்தக்கது, மேலும் நடைபெறும் குரு திசை ஜாதகருக்கு 4,10ம் வீடுகள் ஜீவன ஸ்தானமான 10ம் பாவக தொடர்பை பெற்று ஜாதகருக்கான அரசு வேலையை உறுதி  செய்தது, குரு திசையில் சனி புத்தி 5ம் பாவக வழியில் இருந்து கற்ற கல்வி வழியிலான அதிர்ஷ்டத்தை பரிபூர்ணமாக தந்தது, ஜாதகருக்கான ஜீவன மேன்மையை மேலும் அதிர்ஷ்டகரமானதாக மாற்றியது கவனிக்கத்தக்க சிறப்பு அம்சமாகும்.

இருவரது ஜாதகத்திலும் 5நிமிட வித்தியாசம் என்ற போதிலும் பாவக வழியிலான தொடர்புகள் வெகுவாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது, இது நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் பெரும் என்பதுடன், இருவரும் சுவீகரிக்கும் பலாபலன்கள் என்பது முற்றிலும் வேறுபடும் என்பதே உண்மை நிலை, இரட்டை பிறவிதானே இருவருக்கும் ஒரே பலாபலன்கள் நடைபெறும் என்று கருதுவது சுய ஜாதக கணிதம் பற்றிய நுணுக்கம் அறியாமல் வைக்கப்படும் வாதமாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது.

தங்களின் கேள்விக்கான பதில்

தங்களின் மூத்த மகனுக்கு அரசு பணி கிடைக்க வாய்ப்பு என்பது சற்று குறைவு, ஜாதகர் சிறு வியாபாரம் அல்லது ஓர் அடிமை தொழிலை தேர்வு செய்து அதில் வெற்றி பெறலாம், மற்றவர்கள் விஷயத்தில் தலையீடு செய்வது ஜாதகருக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தும், தனது முயற்சியை  கைவிடாமல் போராடி நலம் பெறுவது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

1 கருத்து:

  1. செந்தில் 11/06/1986 6:35 am tirupur
    ரெம்ப கஷ்டமா இருக்கு. புதன் தசா நடப்பு எந்த தொழில் செய்தலும் நஷ்டம் இப்ப பால் பண்ண வைத்தூலன் அதுவும் கடன். எனக்கு எந்த தொழில் சரியா வரும் சார். என் மனைவி 5மாதம் கன்சுவா
    இருக்க. என் ஜாதத்தில் என்னதான் தோஷம் சொல்லுங்க சார், நானும் இந்த உலகத்தில் நல்லா வாழ முடியுமா சார்.

    பதிலளிநீக்கு