சனி, 15 அக்டோபர், 2016

லக்கினாதிபதி அஸ்தமனம், சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம், நான் துரதிர்ஷ்டசாலி என்கின்றனர், நிகழ்காலம் சரியில்லை, எதிர்காலம் உண்டா?


ஜாதக ஆய்வு 

ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையே அடிப்படையாக அமைகிறது என்றால் அது மிகையில்லை, சில ஜாதகங்களில் லக்கினம் முதல் அனைத்து பாவகங்களும் வலிமையாக இருக்கும், அப்படிப்பட்ட சுய ஜாதக அமைப்பை பெற்றவர்கள் யோகதாரிகள் எனலாம், சில ஜாதகங்களில் சில பாவகங்கள் மட்டும் வலிமை இழந்து காணப்படும், அப்படி பட்ட ஜாதகத்தை பெற்றவர்கள் பாதிக்கப்பட்ட பாவக வழியில் இருந்து அதிக அளவில் இன்னல்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், சில ஜாதகங்களில் லக்கினம் முதல் அனைத்து பாவகங்களும் பாதிக்கப்பட்டு இருக்கும் அல்லது பாதக ஸ்தானங்களுடன் சம்பந்தம் பெற்று இருக்கும் இந்த அமைப்பை பெற்ற ஜாதகர்களை அவயோகதாரிகள் எனலாம், பெரும்பாலும் எந்த ஒரு ஜாதகருக்கும் இறையருள் தனது விதி பயன் தரும் பலாபலன்களில் இருந்து விடுபட நிச்சயம் ஏதாவது ஓர் நல்வழியை அமைத்து வைத்து இருக்கும், அதை பற்றி சுய ஜாதக வலிமை கொண்டு தெளிவு பெற்று, தமது வாழ்க்கையை சிறப்பாக ஒவ்வொருவரும் அமைத்துக்கொள்ள இயலும், இதன் அடிப்படையில் ஜாதகருக்கு தேடுதல் இருப்பின் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு யோக வாழ்க்கை நிச்சயம் உண்டு.


தங்களது சுய ஜாதக ரீதியாக தாங்கள் முன்வைத்த கேள்விகளுக்கு சரியான ஜாதகரீதியான விளக்கங்களை "ஜோதிடதீபம்" வழங்க இருக்கின்றது.

1) லக்கினாதிபதி அஸ்தமனம் என்ன செய்யும் ?

கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கிரகங்கள் அஸ்தமனம், நீசம், பகை, தீய ஆதிபத்தியம் போன்ற நிலைகளில் இருப்பது மட்டுமே ஒரு ஜாதகருக்கு இன்னலகளை தந்துவிடும் என்று கருதுவது முற்றிலும் தவறான கருத்தாகும், ஏனெனில் சுய ஜாதகத்தில் ஒருவருக்கு நவகிரகங்கள் எவ்வித நிலையில் இருந்தாலும், பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டே பலன்களை ஆய்வு செய்ய வேண்டும், ஒரு பாவக அதிபதி அஸ்தமனம், நீச்சம், பகை, தீய ஆதிபத்தியம் அடைவதால் இன்னல்கள் வரும் என்பது முற்றிலும் தவறான கருத்து, ஏனெனில் சம்பந்தப்பட்ட பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பின் மேற்கண்ட  அமைப்பில் அஸ்தமனம், நீச்சம், பகை, தீய ஆதிபத்தியம் அடைவதால் எவ்வித இன்னல்களும் ஜாதகருக்கு பாதிப்பை தாராது என்பதே உண்மை, உதாரணமாக தங்களது ஜாதகத்தில் லக்கினாதிபதி அஸ்தமன நிலையில் இருந்தாலும், தனது பாவகத்திர்க்கு 10 ல் அமர்ந்து வலிமையை தருகிறார், மேலும் தனது பாவகத்தை தானே வசீகரிப்பது அதற்க்கு வலிமை சேர்க்கும் அமைப்பாகும், எனவே தங்களது லக்கினம் 100% சதவிகித வலிமையுடன் இருப்பது உறுதியாகிறது, மேலும் லக்கினம் எனும் முதல் வீடு தங்களுக்கு தொடர்பு பெறுவது வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் என்பது வரவேற்க தக்க விஷயமாகும், இதனால் தங்களின் வாழ்க்கையில் தாங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் மிகப்பெரிய வெற்றிகளை இலக்கின பாவக வழியில் இருந்து பெறலாம், நல்ல புகழ் உண்டாகும், வியாபர விருத்தி, செல்வ செழிப்பு, சகோதர வழி ஆதரவு, புகழ் மிக்க பொறுப்புகள் என்ற விதத்தில் சிறப்பான முன்னேற்றத்தை தரும், ஆகையால் தங்களது லக்கினாதிபதி அஸ்தமன நிலையில் இருந்தாலும் தங்களது இலக்கின பாவகம் மிகவும் வலிமையுடன் இருப்பது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் என்பதில்  சந்தேகம் இல்லை அன்பரே !

2) சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பெறுவது என்ன செய்யும் ?

சுக்கிரன் தங்களது ஜாதகத்தில் 3வீடுகளுக்கு அதிபதியாக விளக்குகிறார், அவையாவன 1,7,12ம் வீடுகளாகும், இருப்பினும் அவர் தனது வீடுகளை வீரிய ஸ்தானமான 3ம் பாவகத்துடன் தொடர்பு படுத்துவது தங்களுக்கு சிறப்பான நன்மைகளை தரும் அமைப்பாகும், மேலும் 3ம் பாவக அதிபதி குரு பகவானாக அமைவது தங்களுக்கு மேலும் சிறப்பான நன்மைகளை தேடி தரும், மேற்கண்ட விஷயங்கள் யாவும் தங்களின் சுய ஜாதக வலிமையின் அடிப்படையில் மிக துல்லியமாக கணிக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க, சுக்கிரன் கேந்திர ஆதிபத்திய தோஷம் அடைவதால் தங்களுக்கு யாதொரு துன்பமும் இல்லை ஏன்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளுங்கள்.

3) துரதிர்ஷ்டசாலியா நான் ?

எந்த ஒரு ஜாதகருக்கும் அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை வாரி வழங்கும் 11ம் பாவகம் வலிமையுடன் இருப்பின் அவரை துரதிர்ஷ்டம் நெருங்குவதில்லை, ஒருவேளை அப்படி இன்னல்கள் ஏற்ப்பட்டால் அதுவே அந்த ஜாதகருக்கு சிறப்பான நல்வாழ்க்கையை வழங்கும் விதமாக அமைந்துவிடும் என்பதை கருத்தில் கொள்க, தங்களது ஜாதகத்தில் அதிர்ஷ்டத்தை குறிக்கும் 11ம் வீடு ஜீவன ஸ்தானமான 10ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது மிகுந்த நமைகளை தரும் அமைப்பாகும், எனவே நிச்சயம் சொல்லலாம் தங்களது ஜாதகம் ஓர் அவயோக ஜாதகம் அல்ல, தாங்களும் துரதிர்ஷ்டசாலி அல்ல என்று, எனவே இதுபோன்ற மூட நம்பிக்கைகளை களைந்து வாழ்க்கையை சிறப்பாக எதிர்கொள்ளுங்கள்.

4 ) நிகழ்காலம் சரியில்லை,  இதுவரை இன்னல்களை மட்டுமே சந்தித்துக்கொண்டு இருக்கின்றேன் இது ஏன் ?

தங்களுக்கு தற்பொழுது தான் வயது 20 முடிவடைகிறது, அதற்குள் 50 வயது கடந்த பெரிய மனிதர்களின் கருத்தை முன் வைப்பது  வேடிக்கையாக இருக்கின்றது, இருப்பினும் தங்களுக்கு இதுவரை நடந்த இன்னல்களுக்கு உண்மையான காரணம் என்பதை பற்றி சிந்திப்போம், தங்களுக்கு பிறப்பில் கேது திசை சிறிது காலமும், அதன் பிறகு தற்பொழுது சுக்கிரன் திசை ( 08/07/2017 வரை ) நடைமுறையில் உள்ளது, தற்பொழுது நடைமுறையில் உள்ள சுக்கிரன் திசை தங்களுக்கு எவ்வித பலனை தருகிறது என்று ஜாதக ரீதியாக ஆய்வு செய்தால், சுக்கிரன் தங்களுக்கு 4,7ம் வீடுகள் விறைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று, முழு வீச்சில் விறைய ஸ்தான பலனை தந்து கொண்டு இருக்கின்றது, இதனால் தாங்கள் சுக ஸ்தான அமைப்பில் இருந்து, சுக போகங்கள் அற்ற நிலையையும், தாய் வழியில் இருந்து இன்னல்களையும், வீடு,வண்டி வாகனம் அற்ற நிலையிலும், வாழ்க்கையில் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது, சுய ஜாதகத்தில் சுக்கிரன் வீரிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற போதிலும், தனது திசா காலங்களான 20 வருடங்களிலும் விறைய ஸ்தான பலனை ஏற்று நடத்துவது தங்களுக்கு அதிக அளவில், வீண் விரையங்களையும், மன அழுத்தம் மற்றும் மன போராட்டங்களையும் தருகிறது.

மேலும் களத்திர ஸ்தான வழியில் இருந்து தங்களுக்கு நல்ல நண்பர்கள் சேர்க்கை அற்ற நிலையையும், சேரும் நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் எதிர்பால் அமைப்பினரிடம் இருந்து அதிக அளவில் இன்னல்களையும் துன்பங்களையும் தருகிறது, இதானால் தங்களின் மன நிம்மதி வெகுவாக பாதிக்க படுகிறது என்பதே உண்மை, எனவே சுக்கிரன் திசையில் தாங்கள் எவ்வித யோக பலன்களையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பது எமது வேண்டுகோள், மேலும் நடைபெறுவது விறைய ஸ்தான பலன் என்பதால் தங்களின் மனம் ஒரு நிலைப்பட்ட வாய்ப்பு இல்லை, மன சஞ்சலம் தாங்கள் செய்யும் காரியங்களில் தோல்விகளை வழங்கும், நினைத்தது எதுவும் நடைபெறாது, அனைவராலும் தொல்லைகள் மற்றும் இழப்புகளை தரும் என்பது விதி, இதை தாங்கள் உணர்ந்து, விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நிச்சயம் தங்களுக்கு நன்மை உண்டாகும்.

5) எதிர்காலம் சிறப்பாக அமையுமா ? வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகுமா ?

எதிர்வரும் சூரியன் திசையும், அதற்க்கு அடுத்து வரும் சந்திரன் திசையும் தங்களுக்கு  ஜீவன ஸ்தானமான 10 ம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோக பலனை வாரி வழங்குகிறது, எனவே தங்களது எதிர்கால வாழ்க்கை மிகவும் சிறப்பாக உள்ளது என்பது வரவேற்க தக்க அம்சமாகும், மேலும் தங்களது ஜீவன ஸ்தானம் சர ராசியான மகரத்தில் அமைவதும், அது தொடர்பு பெரும் 7ம் பாவகம் சர காற்று ராசியான துலாம் ராசியில் அமைவதும் தங்களின் வாழ்க்கையில் அபரிவிதமான பொருளாதார முன்னேற்றங்களையும், செல்வ செழிப்பையும் வாரி வழங்கும் என்பதை கவனத்தில் கொள்க, சூரியன் சந்திரன் திசைகள் இரண்டும் தங்களுக்கு சிறப்பான யோக வாழ்க்கையை தர காத்துகொண்டு இருக்கிறது என்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்க, மேற்கண்ட திசைகள் தங்களுக்கு நடைமுறையில் வரும்பொழுது, சுபயோக பலன்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் நடைமுறைக்கு வரும் என்பது கவனிக்க தக்க அமசமாகும்.

தங்களது சுய ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பது தங்களுக்கு உகந்தது அல்ல, எனவே தாங்கள் தங்களது பூர்வீகத்தில் இருந்து வெளியேறி, வெளியூரில் ஜீவனம் தேடுவதே சிறந்தது, தங்களது சுய ஜாதகத்தில் உள்ள அனைத்து சுபயோகங்களையும் பரிபூர்ணமாக பெற அதுவே தங்களுக்கு உகந்தது, இல்லை எனில் தங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது குதிரைகொம்பாக மாறிவிடும் என்பதை கவனத்தில் கொள்க.

வாழ்த்துகள்

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக