ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

துர் ஸ்தானம் எனப்படும் 6 ,8 ,12ம் வீடுகள் ஒரு ஜாதகருக்கு தீமையான பலனை மட்டும்தான் தருமா ? நன்மை செய்யாதா ?



பொதுவாக ஒருவருடைய ஜாதக அமைப்பில் 6 ,8 ,12ம் வீடுகள் துர் ஸ்தானம் என்று பல ஜோதிடர்களால் வர்ணிக்க படுகிறது , மேலும் இந்த வீடுகளுக்கு அதிபதிகளுடன் எந்த கிரகமும் சேரக்கூடாது என்றும் , இந்த வீடுகளில் எந்த கிரகமும் இருக்க கூடாது என்று சொல்பவர்களும் உண்டு , குறிப்பாக இந்த வீடுகளின் திசை புத்தி ஜாதகருக்கு நன்மை தர வாய்ப்பில்லை தீமையான பலனே நடைபெறும்  என்று வயிற்றில் புளியை கரைப்பவர்களும்  உண்டு , ஒரு ஜோதிடரால்  இந்த புளி கரைசலுக்கு ஆளான ஒரு நபர் , செய்வது அறியாமல் நன்றாக ஓடிக்கொண்டு இருந்த வண்டி வாகனத்தை விற்று விட்டு , ஈமு கோழியில் முதலீடு செய்து உள்ளதும் போச்சு ....... கண்ணா என்று , எங்களிடம் ஆலோசனை பெற வந்தார் , அவரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது . 


ஒருவருடைய ஜாதக அமைப்பிற்கு ஏற்ற தொழில் எதுவோ அதை தெளிவாக தெரிந்து கொண்டு , சிறப்பாக செய்வதே அதிக நன்மை தரும் , மேலும் ஜாதகருக்கு ஏற்ற தொழில் எதுவென்பதை ஜாதகருக்கு இயற்க்கை , நிச்சயம் ஏதாவது ஒரு வகையில் உணர்த்தி விடும் , மேலும் ஜீவன ஸ்தானத்தையும் , களத்திர ஸ்தானத்தையும் வைத்து ஜாதகரின் ஜீவனம் எப்படி அமையும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள இயலும் , குறிப்பாக பண்ணை தொழில் , விவசாயம், உணவு பொருட்கள் உற்பத்தி தொழில்கள் செய்வோருக்கு நான்காம் பாவகம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றிருக்கும் , இந்த அமைப்பை பெற்றவர்கள் மேற்கண்ட தொழில்களில் சிறப்பான முன்னேற்றமும் , அதிக வருமானமும் பெற முடியும் .

எம்மை பார்க்க வந்தவரின் ஜாதக அமைப்பில் ஜீவன ஸ்தானம் களத்திர ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று , சர மண் ராசியாக அமைந்து இருந்தது , மேலும் பனிரெண்டாம் வீடு பாதக ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருந்தது , இந்த அமைப்பை பொறுத்த வரை வண்டி வாகன தொழில் ஜாதகர் கூட்டாக செய்து வந்த பொழுது ஜாதகருக்கு எவ்வித சிக்கல்களும் தரவில்லை, காரணம்  ஜாதகரின் தொழில் ஸ்தானம் களத்திர ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றதே காரணம் , ஆனால் நான்காம் பாவகம் ஜாதகருக்கு விரைய ஸ்தானதுடன் சம்பந்தம் பெற்று இருந்தது , ஜாதகரை தேவையில்லாமல் சம்பந்தம் இல்லாத தொழில் செய்ய வைத்து , கையிருப்பு அனைத்தையும் திடீர் என இழக்கும் சூழ்நிலையை  ஏற்ப்படுத்தியது .

மேலும் ஜாதகருக்கு ஆறுதல் சொல்லி செய்ய வேண்டியதை தெளிவாக அறிவுறுத்தி அனுப்பி வைத்தோம் , இந்த ஜாதகத்தில் விரைய ஸ்தானம் வலுவாக பாதிக்க பட்டதே இதற்க்கு காரணம் , ஒருவருடைய ஜாதகத்தில் விரைய ஸ்தானம் பாதிக்க படாமல் இருப்பதே நன்மையை தரும் , மேலும் 12 ம் பாவகம் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகருக்கு திடீர் என பொருள் வரவையும் , சொத்து சுக வாழ்க்கையையும் தரும் , லாட்டரியில் யோகம் பெற வேண்டும் எனில் ஜாதகத்தில் இந்த 12 ம் பாவகம் மிகவும் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகருக்கு லாட்டரியில் யோகம் உண்டு , திடீர் என வாழ்க்கையில் அதிர்ஷ்டம் யோகம் உண்டாகும் , நல்ல மன நிம்மதி கிடைக்கும் , தனது பெயரில் வைத்திருக்கும் சொத்துகள் எவ்வித இழப்பையும் சந்திக்காது என்பதே உண்மை .

பொதுவாக துர் ஸ்தானம் எனப்படும்  6 ,8 ,12ம் வீடுகள் ஒரு ஜாதகருக்கு தீமையான பலனை மட்டும்தான் தருமா ? நன்மை செய்யாதா ? என்பதை பற்றி இதில் சிந்தனைக்கு எடுத்து கொள்வோம்  .

6 ம் வீடு  ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

ஜாதகருக்கு முதலில் நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும் , ஜாதகருக்கு பகைவரால் நன்மையே ஏற்ப்படும் , ஜாதகர் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி பெரும் , தன்னம்பிக்கை மிகுதியாக அமைந்திருக்கும் , வட்டி தொழில் மூலம் அதிக வருமானம் கிடைக்கும் , தாய் மாமன் மூலம் அதிக உதவிகள் கிடைக்க பெறுவார் , ஜாதகருக்கு கிடைக்கும் சிறு சிறு அதிர்ஷ்டங்கள்  இந்த பாவக வழியில் இருந்தே கிடைக்கும் 

6 ம் வீடு  ஜாதகத்தில் பாதிக்கபட்டு  இருந்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள்  :

உடல் ரீதியான பாதிப்புகள் ஜாதகரை படுத்தி எடுக்கும் , மேலும் மன ரீதியான பாதிப்புகளும் ஜாதகரை அதிகம் துன்புறுத்தும் , வட்டிக்கு கடன் பெறுவது , கடன் கொடுப்பது , ஜாதகருக்கு அதிக இன்னல்களை ஏற்ப்படுத்தும் , தாய் மாமன் உறவு வழியில் இருந்து  நன்மை ஏதும் பெற முடியாது , உறவினர்கள் அனைவரையும் தேவையில்லாமல் பகைத்து கொள்ள வேண்டி வரும் , எதிரிகளால் அதிக துன்பத்தை அனுபவிக்க வேண்டி வரும் .

8 ம் வீடு  ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

ஜாதகருக்கு பூரண ஆயுள் அமைந்து விடும் , விபத்து ஏற்ப்படும் பொழுது அதிக பாதிப்பு இல்லாமல் ஜாதகர் தப்பிக்கும் வாய்ப்பை ஏற்ப்படுத்தும் , உடல் ரீதியான பாதிப்பில் இருந்து ஜாதகர் விரைவில் குணம் பெரும் அமைப்பை தரும் , திடீர் என ஜாதகருக்கு குபேர சம்பந்து கிடைப்பதெல்லாம் இந்த பாவகம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே கிடைக்கும் , மேலும் மனைவி வழியில் இருந்து வரும் சொத்து , யோகம் பற்றி குறிப்பிடுவதும் இந்த பாவகமே .

8 ம் வீடு  ஜாதகத்தில் பாதிக்கபட்டு  இருந்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள்  :

இந்த வீடு பாதிக்க பட்டாலும் ஜாதகருக்கு பூரண ஆயுள் அமைந்து விடும் , ஆனால் உடல் ரீதியான தொந்தரவுகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும் , தனது பெயரில் இருக்கும் செல்வங்களை எதிர்பாராமல் திடீர் என இழக்க வேண்டி வரும் , மனைவி மிகப்பெரிய வீண் செலவாளியாகவும் , திடீர் என பண இழப்புகளை தருபவளாகவும் அமைந்து விடுவார், விபத்துகளில் சிக்கி உடல் ரீதியான பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் .

12 ம் வீடு  ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் பெரும் நன்மைகள் :

மன நிம்மதியான வாழ்க்கை இயற்கையாக அமையும் , கணவன் மனைவி நல்லுறவு சிறப்பாக அமையும் , ஒற்றுமையுடன் குடும்பம் நடத்த இந்த பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் இல்லற வாழ்க்கையில் இன்பம் காண 12 ம் பாவகம் உறுதுணை புரியும் , ஜாதகர் செய்யும் முதலீட்டில் இருந்து வரும் அதிக வருவாயினை பெற இந்த பாவகம் நல்ல நிலையில் இருப்பது அவசியம் , சில நேரங்களில்  திடீர் என வரும் யோகத்தை இந்த பாவக அமைப்பில் இருந்து தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் , ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை தரும் , மிகசிறந்த ஆன்மீக வாதிகளின் ஜாதக அமைப்பில் இந்த பாவகம் வலிமை பெற்றிருக்கும் .

12 ம் வீடு  ஜாதகத்தில் பாதிக்கபட்டு  இருந்தால் ஜாதகர் பெரும் இன்னல்கள்  :

மன நிம்மதி இழப்பு , எப்பொழுதும் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை , குடும்ப வாழ்க்கையில் மன நிம்மதி இழப்பு , போலி ஆன்மீக வாழ்க்கை , போதை பழக்கத்திற்கு அடிமையாகி உடல் நிலையை கெடுத்துகொள்ளும் தன்மை , மன நோய்க்கு ஆளாகும் சூழ்நிலை , மற்றவர்களால் ஜாதகரை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை , ஜாதகர் மற்றவரை புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை , பெண்களால் ஆண்களும்  , ஆண்களால் பெண்களும்  மன ரீதியான துன்பத்திற்கு ஆளாகும் சூழ்நிலை , தீய பழக்க வழக்கங்களை கற்று கொண்டு அதில் இருந்து வெளி வர முடியாத நிலை , கணவன் மனைவி உறவில் விரிசல் , விவாகரத்து , இல்லற வாழ்க்கையில் துன்பம் , போன்ற இன்னல்களை சந்திக்க வேண்டி வரும் , எக்காரணத்தை கொண்டும்  ஜாதகர் எதிலும் முதலீடு செய்யாமல் இருப்பது,  ஜாதகருக்கும்  ஜாதகரை சார்ந்தவருக்கும் நன்மை தரும் .

துர் ஸ்தானம் எனும் 6 ,8 ,12ம் வீடுகள் ஒரு ஜாதகருக்கு நல்ல நிலையில் இருந்தால் மேற்கண்ட நன்மைகளும் , பாதிக்க பட்டால் மேற்கண்ட தீமையான பலன்களும் நடை பெரும் , எனவே குத்து மதிப்பாக 6 ,8 ,12ம் வீடுகள் பாதிப்பை மட்டுமே செய்யும் என்று ஜோதிட கணிதம் செய்வது முற்றிலும் தவறானது , மேற்கண்ட பாவகங்கள் சுய ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்கிறதா  , பாதிக்க பட்டு இருக்கிறதா என்று தெளிவாக தெரிந்து கொண்டு பலன் சொல்வதே சிறந்த ஜோதிடருக்கு அழகு .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக