வியாழன், 27 நவம்பர், 2014

வாழ்க்கை துணை மூலம் ஒரு ஜாதகருக்கு யோக வாழ்க்கையா ? அவயோக வாழ்க்கையா ? என்பதை நிர்ணயம் செய்வது எப்படி ?


ஒருவரின் சுய ஜாதகத்தை வைத்து தனக்கு வரும் வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகத்தை அனுபவிப்பாரா ? அல்லது அவயோக வாழ்க்கையை அனுபவிக்கும் சூழ்நிலையை தருமா ? என்ற எதிர்பார்ப்பு திருமணம் ஆகாத அன்பர்களுக்கு நிச்சயம் இருக்கும், இந்த விஷயத்தை சம்பந்தபட்ட ஜாதகரின் சுய ஜாதகத்தில் இருந்தே மிக தெளிவாக நாம் தெரிந்துகொள்ள இயலும், சில அன்பர்கள் திருமண வாழ்க்கைக்கு முன்பு வரை சாதராரண வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருந்தவர்களுக்கு, திருமணம் நடந்தவுடன் குறுகிய காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பெறுகின்றனர், சில அன்பர்கள் திருமண வாழ்க்கைக்கு முன்பு வரை நல்ல நிலையில் இருந்தவர்கள், திருமணத்திற்கு பிறகு மிகப்பெரிய இழப்புகளை சந்தித்து வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து கொண்டு போராட்ட வாழ்க்கையை மேற்கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆக ஒருவரின் வாழ்க்கையில் திருமணதிற்கு பிறகு யோக வாழ்க்கையோ அல்லது அவயோக வாழ்க்கையோ சுய ஜாதக ரீதியாக அனுபவிக்கும் தன்மையை தருகிறது என்பதை மறுக்க இயலாது, நமது கிராமங்களில் ஒரு இடத்தில் பெண் எடுத்து திருமணம் செய்யது வந்த பிறகு சம்பந்தபட்டவர்களின் குடும்பம் நல்ல முன்னேற்றத்தை காணும் பொழுது, அருகில் உள்ள மக்கள் அல்லது உறவினர் குறிப்பிட்ட பெண்ணை பார்த்து, மகராசி வந்தவுடன் இந்த குடும்பம் செழித்து நலம் பெற்றதாக வாழ்த்துவார்கள், இதற்க்கு நேர்மாறாக நடைபெற்றால் அந்த பெண்ணை வசைபாடுபவர்களும் உண்டு, உண்மையில் இது பெண்களுக்கு மட்டும் பொருந்தாதது, ஆண்களுக்கும் பொருந்தும் என்பதை மறந்து விடுகின்றனர், இதை ஒரு உதாரணா ஜாதகம் கொண்டு காண்போம் அன்பர்களே !



இந்த ஜாதகர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்தார், ( பெரியோர்களால் நிச்சயம் செய்த பிறகு ) இடையில் சிறு பிரச்சனையின் காரணமாக திருமணம் பாதியில் நின்றது, இருப்பினும் அந்த பெண்ணும் இவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர், இந்த விஷயம் பெண் வீட்டாருக்கு தெரிந்து பிரச்சனை ஆரம்பித்தது, அந்த பெண்ணின் கல்வி தடை பெற்றது, காதலர்கள் இருவரும் சந்திக்க இயலாத சூழ்நிலை வந்தது, இதற்க்கு பிறகு நடந்த விஷயம் தான் ஜாதகரையும், அந்த பெண்ணின் குடும்பத்தையும் பெரிய அதிர்ச்சிக்கு ஆளாக்கியது, காதலர்களுக்கு பிரிவு ஏற்ப்பட்ட 5மாத இடைவெளியில் அந்த பெண் வேற்று மதத்தை சார்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஊரை விட்டே வெளியூருக்கு சென்று விட்டார், இந்த அவமானத்தையும், அதிர்ச்சியையும் அந்த பெண்ணின் குடும்பத்தார் தாங்க இயலாத சூழ்நிலையை தந்துவிட்டது, ஜாதகருக்கு கிட்டதட்ட தற்கொலை செய்து கொள்ளும் நிலை வரை சென்று, உறவினர்களால் காப்பாற்றபட்டு உடல்நலம் பெற்றார் , ஆனால் மனதளவில் இன்னும் கடுமையாக பாதிக்கபட்டே இருக்கிறார் என்பது வருத்தத்திற்கு உரியது, இனி அவரது ஜாதகத்தை ஆய்வுக்கு  எடுத்துகொள்வோம் அன்பர்களே!

பொதுவாக ஒருவரின் சுய ஜாதகத்தில் தனது வாழ்க்கை துணை வழியில் இருந்து  பெரும் யோக வாழ்க்கையை குறிப்பிடும் பாவகம் ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகம் என்றால் அது மிகையில்லை ஏனெனில் 7ம் வீட்டிற்கு இரண்டாம் பாவகம் 8ம் வீடாகும், ஒரு ஜாதகர் தனது வாழ்க்கை துணை வழியில் ( 7ம் வீடு )  இருந்து குடும்ப வாழ்க்கையில் ( 8ம் வீடு ) பெரும் யோக அவயோக பலன்களை குறிப்பிடுவதால், திருமண வாழ்க்கையில் வாழ்க்கை துணை வழியில் இருந்து யோகங்களை பெற ஒருவரின் சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் மிக மிக வலிமையாக இருப்பது அவசியம் என்பதால், திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது விபரம் அறிந்த ஜோதிடர்கள் வரன் வது இருவரின் ஜாதகத்தில் ஆயுள் பாவகத்தின் தன்மையை ஆய்வு செய்து, ஆயுள் பாவகத்திர்க்கு முக்கியதுவம் தந்து பொருத்தம் நிர்ணயம் செய்வார்கள், எனவே வாழ்க்கை துணை வழியில் இருந்து ஒருவர் யோகங்களை அனுபவிக்க ஆயுள் பாவகம் வலிமை பெறுவது அவசியம்.

இந்த ஜாதகரின் சுய ஜாதகத்தில் 8ம் வீடு, ஆயுள் பாவகமான 8ம் பாவகத்துடனே சம்பந்தம் பெற்று 100% பாதிப்பை பெறுகிறது, இந்த ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் வீடாக வருவதால், ஜாதகருக்கு பூரண ஆயுளை தந்த போதிலும், தனது அறிவை கொண்டு வெற்றிபெறும் யோகத்தை தடுத்து நிறுத்தியது, குல தெய்வத்தின் அருளாசியை பெற இயலாமல், குல தெய்வ சாபத்திற்கு ஆளாகும் சூழ்நிலையை தந்தது, அடிப்படையில் இந்த ஜாதகருக்கு 8ம் பாவகம் பாதிக்க பட்டு ஸ்திரமான இன்னல்களை தருகிறது, கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் ராசியான விருச்சிகம் ஜாதகருக்கு பாதக ஸ்தானமாக அமைந்து 3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிக கடுமையான பாதிப்பை பெற்று இருக்கிறது, ஆக இவரது ஜாதகத்தில் சுய இலக்கின அடிப்படையில் 8ம் பாவகமும் பாதிக்க பட்டு, கால புருஷ தத்துவத்திற்கு 8ம் ராசியான விருச்சிகமும் பாதக ஸ்தானமாக அமைந்து 11ம் வீடான பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றதால், ஜாதகர் அந்த பெண்ணின் குடும்பத்தில் கால் வைத்தவுடன் ஸ்திர நீர் தத்துவ விருச்சிகமும், ஸ்திர நெருப்பு தத்துவ சிம்மமும் தனது விளைவுகளை காட்ட ஆரம்பித்தது, இதற்க்கு இவரது ஜாதகமே காரணம் என்று முடிவு செய்ய இயலாது, அந்த பெண்ணின் ஜாதகத்திலும் களத்திர ஸ்தானம் பாதக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்று இருந்ததை இங்கே குறிப்பிட விரும்புகிறோம், விதி அமைப்பு ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இப்படி தொடர்பு படுத்தி தனது விளையாட்டை மிக செம்மையாக நடத்துவதை ஜோதிடதீபம் குறிப்பிட விருபுகிறது.

இவரது ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 8ம் வீடான விருச்சிக ராசி 11ம் பாவகமாக வந்து பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றது, தனது வாழ்க்கை துணையாக நினைத்தவரின் வழியில் இருந்து அதிக மனக்கவலையும் ( ஸ்திர நீர் என்பதால் ஆறாத மனக்காயம் ) , தனது லக்கினபடி 8ம் பாவகம் பாதிக்க பட்டது ஜாதகரின் செயல் திறனையும் ஸ்திரமாக முடக்கியது ( ஸ்திர நெருப்பு ஜாதகரின் செயல்திறனை குறிக்கும் ) இவர் அந்த குடும்பத்தில் நுழையும் வரை எந்த பிரச்சனையும் இல்லை, இவர் நுழைந்த பிறகு அவர்களது குடும்பமும் பல மான அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலையை தந்தது, மேற்கண்ட பலன்கள் யாவும் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் சுக்கிரன் திசை, சுக்கிரன் புத்தி( 08/03/2013 முதல் 07/07/2016 வரை ) 3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று பலனை தந்த காலத்திலேயே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்பர்களே தங்களது வாழ்க்கை துணை வழியில் இருந்து யோக வாழ்க்கையை பெறவேண்டும் எனில் தங்களின் ஜாதகத்தில் ஆயுள் பாவகமான 8ம் பாவக வலிமையை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள் அல்லது தங்களது வாழ்க்கை துணையின் ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெற்று இருக்கிறதா என்பதையும் தெளிவாக தெரிந்துகொண்டு நலம் பெறுங்கள், 8ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின் புதையலுக்கு ஈடான பொருள் வரவையும், அதிர்ஷ்டத்தையும் தரும், 8ம் பாவகம் பாதிக்க பட்டால் திடீர் இழப்புகளை அளவுக்கு அதிகமாக தகுதிக்கு மீறி தரும் என்பதால், திருமணதிற்கு பிறகு சிலர் திடீர் முன்னேற்றம் பெறுவதும், திடீர் விழ்சியை பெறுவதும் ஏன் என்பது வாசகர்களுக்கு புரியும் என்று ஜோதிடதீபம் கருதுகிறது .

குறிப்பு : 

அன்பர்களே மேற்கண்ட விஷயங்கள் யாவும் வாழ்க்கை துணைக்கு மட்டும் பொருந்தும் என்று முடிவு செய்வது சரியாக இருக்கும் என்று தெரியவில்லை, சில நபர்களுக்கு தேவையில்லாத தவறான தொடர்புகள் மூலமும் யோகம் அவயோக பலன்கள் நடைமுறைக்கு வருகிறது, சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை பெற்று இருக்கும் அன்பர்களுக்கு பெரிய பாதிப்பை தருவதில்லை, சுய ஜாதகத்தில் 8ம் பாவகம் வலிமை இன்றியோ, பாதக ஸ்தான அமைப்புடன் தொடர்பு பெற்று இருந்தாலோ ஜாதகர் எக்காரணத்தை கொண்டும் முறை தவறிய தொடர்புகளை தவிர்த்து விடுவதோ, அல்லது இது போன்ற சூழ்நிலைக்கு ஆட்படாமல் தப்பித்து கொள்வது சால சிறந்தது, இல்லையெனில் வாழ்க்கையில் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும், அதன் பாதிப்புகளை ஜாதகரால் தாங்க இயலாது என்பது ஜோதிடதீபத்தின் அறிவுரைகள் .

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696



1 கருத்து:

  1. பராம்பரிய ஜோதிடர்கள் சுக்கிரன் தசை மகர லக்கினத்திற்கு மகா யோகதசை என்று சொல்லியிருப்பார்கள். வரன்,வது இருவர் ஜாதகத்தில் 8ம் பாவகம் பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது அண்ணா?.

    பதிலளிநீக்கு